தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ
யாதவி கல்லூரிக்கு வரும் போது மணி ஒன்பதை தாண்டியிருந்தது. அவள் வரும் போது அவளுக்கு துணையாக இன்னும் சில தோழிகள் வகுப்புக்கு போகாமல் அவளுக்காக காத்திருந்தனர். அதற்கு காரணம் இருக்கிறது. இன்றைய காலை வகுப்பு பொருளாதார பேராசியருடையது. சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் வகுப்புக்கு வருபவர் உடனே அட்டண்டன்ஸ் எடுக்க ஆரம்பித்துவிடுவார். அதற்குபிறகு வருபவர்களை அவர் உள்ளே அனுமதிக்க மாட்டார். மற்ற ஆசிரியர்களாக இருந்தால் உள்ளே அனுமதித்து விடுவர்.
அவரை பற்றி தெரிந்ததால் தாமதமாக வருபவர்கள் அவரின் வகுப்புக்கு செல்லாமல் நேராக கேண்டின் சென்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பர். தன் தோழிகளும் அங்கு தான் இருப்பார்கள் என்பதை அறிந்த யாதவி நேராக அங்கு செல்ல, அவளின் தோழிகளுக்கு முன்னால் அவளுக்காக அங்கு ஜகதீஷ் காத்துக் கொண்டிருந்தான்.
கல்லூரியின் முதல் நாள் அடியெடுத்து வைத்த போதே யாதவியின் அழகில் மயங்கி அவளை காதலிப்பதாக கடிதத்தை நீட்டியவன், ஆனால் யாதவி அவனுக்கு இன்னும் சரியென்று சொல்லவில்லை. அதே சமயம் அவனை வேண்டாமென்றும் மறுக்கவில்லை. ஆனால் அவள் செய்கைகள் அவள் வேண்டாம் என்று சொல்வது போல் தான் இருக்கும், ஆனாலும் அவளுக்காக எப்போதும் அவன் தவம் இருப்பது போல் காத்திருப்பான்.
இன்றும் அவளது தோழிகள் கேண்டினீல் இருப்பதை பார்த்துவிட்டு அவளுக்காக கேண்டீன் வாசலில் காத்திருக்க ஆரம்பித்தான். ஆனால் அவனை சிறிது கூட கண்டு கொள்ளாமல் யாதவி உள்ளே நுழைந்தாள்.
“யாத்வி ப்ளீஸ் பாரேன்.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்ற அவனது கெஞ்சல்கள் அவளை பின் தொடர்ந்து வந்தும் அவள் சிறிதும் அசைந்துக் கொடுக்காமல், தோழிகளை பார்த்து “ஹாய்..” என்று கையசைத்தப்படி அவர்களோடு இணைந்துக் கொண்டாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“என்னடி உன்னோட பாடிகார்ட் அவன் வேலையை ஆரம்பிச்சிட்டான் போல..” என்று ஒரு தோழி கேலி செய்ய,
“அவன் கிடக்கறான் விடுடி..” என்று யாதவி கூறினாள்.
“ஏண்டி அவனுக்கு எந்த பதிலும் சொல்லாம இப்படி அலைய விட்ற.. பார்க்க அழகா இருக்கான்.. அவங்க அப்பா அரசியல்வாதி, எப்படியோ பணம் உள்ள பார்ட்டி தானே.. அப்புறம் அவனுக்கு ஓகே சொல்றதுக்கு என்னடி..” என்று அந்த தோழி கேட்க,
“பணம் உள்ள பார்ட்டின்னு ஓகே சொல்லிட முடியுமா? இப்போ அவங்க கட்சி ஆளுங்கட்சியா இருக்கு.. சாராய கடையை கான்ட்ராக்ட் எடுத்து லட்சம் லட்சமா சம்பாதிக்கிறாங்க.. அடுத்த முறை வேற கட்சி வந்தா என்ன ஆகும் இவங்க நிலைமை.. ஜகதீஷ்ல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்.. என்னோட கணக்கே வேறடீ..”
“தெரியும் உன்னோட கனவு ஹீரோயின் ஆகறது தானே.. அதான் உன்னோட அப்பா உன்னை ஹீரோயின் ஆக்க முழு முயற்சில இருக்காரே..” என்று இன்னொரு தோழி கேட்க,
“ச்சேச்சே ஹீரோயினா ஆகறதெல்லாம் சும்மாவா.. எப்பவும் நம்மளை ஒல்லியா வச்சுக்க டயட் இருக்கணும்.. சுதந்திரமா இருக்க முடியாது.. கொஞ்சமாவது கிளாமர் காட்டணும்.. பணம் வருதுன்னு இதெல்லாம் என்னால சகிச்சிக்க முடியாது.. எனக்கு இதெல்லாம் செட் ஆகாது..”
“அப்புறம் எதுக்குடீ உங்கப்பா சினிமா சான்ஸ்க்காக டைரக்டரை பார்க்க போனா நீயும் கூட போற..”
“அது சும்மா அப்பாவை ஏமாத்த தான், அழகா இருந்துட்டா போதுமா கொஞ்சமாவது நடிக்கணுமில்ல.. அங்க போய் நான் ஒழுங்கா நடிச்சு காமிச்சா தானே.. அதுவுமில்லாம இப்போல்லாம் நினைச்ச எல்லோரும் நடிகையாக முடியாது.. கொஞ்சமாவது மெனக்கிடணும்.. மாடலிங், டிவின்னு கொஞ்சமாவது பிரபலமா இருக்கணும்.. இல்ல பணம் இருக்கணும்.. அப்போ தான் ஹீரோயின் சான்ஸ்ல்லாம் கொடுப்பாங்க.. அதனால எங்கப்பா ஆசை ஈசியால்லாம் நிறைவேறிடாது..”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“ஒருவேளை உன்னோட எண்ணத்தையும் மீறி உனக்கு ஒருவேளை சான்ஸ் கொடுத்தாங்கன்னா என்னடி செய்வ..”
“அப்படி ஒரு சிட்டுவேஷன் வந்தா அப்போ பார்த்துக்கலாம்.. எனக்கெல்லாம் இப்படி மெனக்கிடாம பணக்கார வாழ்க்கை வாழணும்.. அதுக்கு ஒரே வழி நல்ல பணக்காரனா பார்த்து கல்யாணம் செஞ்சுக்க வேண்டியது தான், இந்த ஜகதீஷை விட பணக்காரனா..” என்று கண்களில் கனவை தாங்கியப்படி கூறினாள்.
இவர்களின் விவாதங்கள் அனைத்தையும் அருகில் அமர்ந்தப்படியே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சக்தியோ,
“இங்கப்பாரு நீ ஹீரோயின் ஆகறியோ இல்லையோ.. எப்படியோ ஜகதீஷ்க்கு ஓகே சொல்லப் போறதில்ல தானே.. அப்புறம் ஏண்டி அவன்கிட்ட இன்னும் வேணாம்னு சொல்லாம இருக்க.. சொல்லிட வேண்டியது தானே..” என்றுக் கேட்க,
“ஏன் நான் வேண்டாம்னு சொன்னதும் அவன் எப்படியோ உனக்கு ஓகே சொல்லிடுவான்னு தானே அப்படி சொல்ற.. அது நடக்கும்னா நினைக்கிற.. அப்படியே நடக்கும்னாலும் அவன் உனக்கு வேண்டாம் டீ..” என்ற யாதவியின் பதில் சக்திக்கு கோபத்தை வரவழைத்தது.