தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 52 - சித்ரா. வெ
மகிழ்வேந்தனும் சுடரொளியும் மண்டபத்திற்கு வரும்போது நிச்சயதார்த்த சடங்குகள் ஆரம்பித்திருந்தது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மண மேடையில் இருந்தனர். இருவரின் வருகையை பார்த்து வரவேற்பது போல் தலையசைத்தவர்கள் தான், அடுத்து அவரவர் வேலையில் மூழ்கிவிட்டனர்.
மகியும் அதன்பின் சும்மாயிருக்கவில்லை. அங்கே வாசலில் வரவேற்பு, உணவுகூடம் என்று மேற்பார்வையிட என்று அறிவழகனோடு சென்று இணைந்துக் கொண்டான். இதில் அவன் வந்ததை அறிந்த புகழேந்தி வேறு அவன் மேல் இருந்த கோபம் போய் வேலை விட்டுக் கொண்டிருந்ததால் உற்சாகமாக செய்துக் கொண்டிருந்தான். இதில் அவன் அதன்பின் சுடரொளியை கண்டுக் கொள்ளவில்லை,
அவளுக்கும் மேடையில் சென்று உரிமையாக இருக்க தயக்கம் இருந்ததால் அப்படியே மணமேடைக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள். இருந்தாலும் தனிமையில் அமர்ந்திருப்பது ஒருமாதிரி இருந்தது. மகி அருகில் இருந்தாலாவது அவளுக்கு எதுவும் தெரிந்திருக்காது. அவனும் இல்லாததால் ஒரு மாதிரி மனநிலையில் அமர்ந்திருந்தாள்.
ஆனந்தி பார்த்துவிட்டு மேடைக்கு அழைத்தார் தான், ஆனால் அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். அமுதனும் பார்த்து கையசைத்தாலும் அவனுக்கு அவளை அழைக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை.
மற்றவர்கள் யாராவது அழைப்பார்களா? என்று எதிர்பார்த்தாள். ஆனால் யாரும் அவளை அழைக்கவில்லை. மகிக்கு பிறகு எழில், பூங்கொடி தான் அவளுக்கு நெருக்கம், ஆனால் அவர்கள் இருவருமே மேடையில் முக்கியமாக அமர்ந்திருக்க வேண்டும்,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அருள் சார்பாக புகழேந்தியும் பூங்கொடியும், அமுதன் சார்பாக கதிரும் எழிலரசியும் அமர்ந்து தாம்பூலம் மாற்றிக் கொண்டார்கள். அதனால் அவர்கள் கவனம் அங்கேயே இருந்தது. மற்றவர்கள் அவளை கவனித்தும் கூப்பிட நினைக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு இருந்தார்கள். புவியையாவது அருகில் அமர வைத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் அவன் மலர்கொடியின் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டு அங்குமிங்கும்.அலைந்துக் கொண்டிருந்தான். அதனால் சுடர் தனியாகவே அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
தாம்பூலம் மாற்றிக் கொண்டதும் அருள்மொழி அங்கு வரவழைக்கப்பட்டு அவளிடம் நிச்சயதார்த்த புடவையை கொடுத்து கட்டிக் கொண்டு வர சொன்னார்கள். அவள் திரும்ப வந்ததும் அவளுக்கு நலங்கு வைத்து, பின் இருவரையும் மோதிரம் மாற்றிக் கொள்ள சொன்னார்கள்.
மனதில் பொங்கிய மகிழ்ச்சியோடு அமுதன் அருளின் கைகளை பிடித்து மோதிரம் போட, அவளும் அதே மகிழ்ச்சியில் இருந்தாளா? என்பது சந்தேகம் தான், ஏனென்றால் இன்னும் குழப்பமான மனநிலையில் தான் அவள் இருந்தாள். அமுதன் அவளைப் பார்த்து புன்னகைத்த போது கூட அவளால் பதிலுக்கு அப்படி செய்ய முடியவில்லை. அவன் புன்னகைக்கவும் அவள் தலைகுனிந்துக் கொள்ள அதை அவள் வெட்கம் என்று நினைத்துக் கொண்டான்.
பின் சடங்குகள் முடிந்து வந்தவர்கள் அனைவரும் சாப்பிடச் செல்ல, இங்கு இருவரையும் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
மகியோ உணவு கூடத்தில் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்ததால் மகியும் அவளும் புகைப்படம் எடுக்க கூட செல்லாமல் சுடர் அதே இடத்திலேயே அமர்ந்திருந்தாள்.
அமுதனுக்கு சுடரை பிடிக்கும் தான், ஆனால் இதுபோல் பொது இடத்தில் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அவனுக்கு குறிப்பிட்டு தெரியாது. அதனால் அழைக்கவில்லை. ஆனந்தியின் உடல் நலம் குறித்து நிகழ்ச்சி நடைப்பெற்று முடிந்ததும் அவரும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். மற்றவர்களுக்கும் வேலை மும்முரத்தில் அவளை அழைக்க வேண்டும் என்று தோன்றாமல் போயிற்று, இதெல்லாம் சுடருக்கு, அவளை அனைவரும் ஒதுக்குவது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதாகவே தோன்றியது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
புகைப்படம் எடுத்து முடித்ததும் அருளையும் அமுதனையும் சாப்பிட வைக்கலாம் என்று நினைக்கும் போது, அமுதனுடன் லண்டனில் வேலை பார்க்கும் சில நண்பர்கள் வீடியோ காலில் பேசினார்கள். அருளையும் அவனோடு இணைத்துக் கொண்டு அமுதன் அவர்களோடு பேசினான். அவளுமே அவர்கள் கேலி செய்வதற்கும் கேள்விகளுக்கும் புன்னகையுடனே பதிலளித்தாள்.
பின் அமுதன் மட்டுமே அவர்களோடு பேசிக் கொண்டிருக்க, அருள் அங்கேயே நின்று கொண்டிருக்க வேண்டியதாக போயிற்று, மற்றவர்கள் அவரவர் ஏதேதோ பேசிக் கொண்டு நின்றிருக்க, தற்செயலாக அமுதன் பேசிக் கொண்டிருக்கவும், அருள் என்ன செய்வது என்பது புரியாமல் தனியாக நின்றுக் கொண்டிருப்பதை பார்த்த பூங்கொடி இலக்கியாவை தேடினார். அவள் அங்கு தென்படாததால் அங்கே அமர்ந்திருந்த சுடரை அழைத்து,
“சுடர் அருளை ரூமுக்கு கூட்டிட்டு போ.. அமுதன் தம்பி வந்ததும் ரெண்டுப்பேரையும் சாப்பிட கூட்டிட்டு போகலாம்..” என்று கூறினார்.
அவளும் சரியென்று தலையாட்டியவள், அருள்மொழியின் அருகே சென்று, “ அருள் வா கொஞ்ச நேரம் ரூம்ல வந்து உட்காரு..” என்று அவளை கைப்பிடித்து அழைத்துச் சென்றாள்.
அதோடு அவள் அமைதியாக இருந்திருக்கலாம், அதை விடுத்து இருவரும் தனியாக இருப்பதால் பேச்சுக் கொடுப்போம் என்று, “அருள் இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்றுக் கூறினாள்.