ஒரு வேளை விருப்பம் இல்லையோ? ஏனோ இப்படி நினைக்கும்போதே எரிச்சலாய் இருந்தது ஜெயந்த்க்கு.திரும்பவும் அவனே தன் தாயின் எண்ணிற்கு அழைக்க தன் கைப் பையில் வைத்திருந்ததால் இருந்த சத்தத்தில் அவர் அதை கவனிக்கவில்லை.
ஜெயந்தோ தன் நிலைமையை நினைத்து நொந்து கொண்டான்.அம்மா அத்தனை தடவை கூப்டாங்களே பெரிய இவனாட்டம் வரலனு சொல்லிட்டேன்.இந்த பொண்ணு வேற ஏதோ பயந்து பயந்து பேசுற மாதிரி இருந்துச்சு..
இந்த அம்மா சும்மாவே இருந்துருக்கலாம் எதுக்கு இப்போ போன் பண்ணி அவகிட்ட கொடுத்தாங்க..”,என தனக்குள்ளேயே ஆயிரம் பட்டிமன்றங்களை நடத்திக் கொண்டிருந்தான் ஜெயந்த்.
அங்கு ஜீவிகாவோ மனதிற்குள் ஆசை தீர அவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.
“மார்க்கெட் மாங்கா கொஞ்மாச்சும் அக்கறை இருக்கா பாரு..முதல் தடவை ஒருத்தி பேசுறேனே இரண்டு நிமிஷம் பேசினா என்னவாம்.பெரிய அம்பானினு நினைப்பு என்கிட்ட பேசுற நேரத்துல இவருக்கு கோடி ரூபா நஷ்டம் ஆகிட போகுது.
அடியேய் ஜீவி உன் நிலைமை ரொம்ப கஷ்டம்டீ..மஞ்சுளாக்கு ஆம்பளை கெட்டப் போட்டவனா இருப்பான் போலயே..கடமை நேர்மை எருமைனு ரூல்ஸ் பேசுவானோ..
மகனே அப்படியெல்லாம் இருந்த சோறே போடமாட்டேன்.அவங்க போன்ல இருந்து நம்பரையாவது சுட்டுருக்கலாம்.அதுகுள்ள வந்து வாங்கிட்டு போய்ட்டாங்களே!!குடும்பமே ஒவ்வொரு ரகமா இருக்கும் போல.”,என அவள் மாமியாரையும் விட்டு வைக்காது திட்டித் தீர்த்தவள் மற்றவர்களோடு கலந்து கொண்டாள்.
இரவு வாட்ஸ்அப் க்ரூபில் நடந்ததையெல்லாம் டைப் செய்ய சோம்பல் பட்டுக் கொண்டு வாய்ஸ் மெசெஜாக இருவருக்கும் அனுப்ப அவளின் வாய்ஸ் மாடுலேஷனில் ஆத்விக்கும் ரேஷ்வாவும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
ரேஷ்வா,”ஆனாலும் மாப்பிள்ளை நிலைமை கொஞ்சம் பாவம் தான் போலயே ஜீ”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
ஆத்விக்,”ரேஷ் மனசைத் தொட்டு சொல்லுங்க கொஞ்சம் தானா?”,என்று அனுப்பியவன் கண்ணீரோடு சிரிக்கும் ஸ்மைலியை போட்டுத் தள்ள ஜீவிகாவோ கோப ஸ்மைலியாய் போட்டுவிட்டு,
“மகனே கடைசி வரை நீயெல்லாம் ஒண்டிகட்ட தான்..ரேஷ் அவனோட சேர்ந்து நக்கல் பண்ணா உங்களுக்கும் சாபம் விட்டுருவேன் சொல்லிட்டேன்.ஒருத்தி எவ்ளோ சோகமா நடந்ததை சொல்றா என்னை வச்சு காமெடி பண்றீங்களா..ஹேட் யூ பீப்புள்.டெவில் நைட்”,என்று பதில் அனுப்பிவிட்டு உறங்கிவிட்டாள்.
அடுத்த இரண்டு நாட்களும் கல்லூரியில் இன்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால் வகுப்புகள் நடைபெறவில்லை.கல்லூரியே அல்லகோலப் பட்டுக் கொண்டிருந்தது.
கலர் கலராய் மாணவிகள் வளாகத்தை வலம் வர காளையர்கள் அவர்களை பின் தொடர்ந்தவாறே பொழுதை கழித்தனர்.தன் டிப்பார்ட்மெண்ட் மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக ஜீவிகா அவர்களிருந்த வகுப்பிற்குச் சென்றாள்.
பெண்கள் அனைவருமாய் தயாராகிக் கொண்டிருந்தனர்.அவளைப் பார்த்ததும் சந்தோஷமாய் அவளை சூழ்ந்து கொண்டனர்.
“என்ன எல்லாம் ரெடியா?”
“எஸ் மேம் என் ஐ லேஷ் தான் உடைஞ்சுருச்சு..என் ப்ரெண்ட் புதுசு வாங்கிட்டு வரை போய்ருக்கா”,அந்த மாணவி பேசியதை கேட்டவாறே டேபிளில் இருந்த அழகு சாதனப் பொருட்களை நோட்டம் விட்டவள் கன்னத்தில் கைவைத்துவிட்டாள்.
“என்னாச்சு மேம்?”
“இல்ல நீங்க எல்லாம் இப்போவே ப்ராண்டட் மேக்கப் கிட்ஸ்,ஐ லேஷ் லிப் க்ளாஸ்னு கலக்குறீங்களே எங்களோட ஸ்கூல் காலேஜ் டைம் மேக்கப் பார்த்தா எனக்கே என்னை அடையாளம் தெரியாது.அவ்ளோ கொடுரமா இருப்பேன்.
முகம் மொத்தம் பவுண்டேஷன் போட்டு அதுக்கு மேல நாலு இன்ஞ் பவுடர் போட்டு ப்ளஷ்ங்கிற பேர்ல கன்னம் ரெண்டையும் ரோஸ் ஆக்கி உதட்டுல நல்ல லிப்ஸ்டிக்கை போட்டு தேச்சுவிட்டு கண்ணாடி முன்னாடி போய் நின்னா ப்ப்ப்பாபாபாபா அப்படி இருக்கும்..இப்போ பசங்க ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கீங்க..”
“ஹா ஹா மேம் அப்போ உங்க போட்டோ பார்த்தே ஆகனுமே ஒருநாள் எடுத்துட்டு வாங்க..”
“ஏன்ம்மா இந்த கொலைவெறி உனக்கு..நானே அதையெல்லாம் யார் கண்ணுக்கும் தெரியாம ஒளிச்சு வச்சுட்டேன்.இப்போ எங்க இருக்குனு கூட தெரியாது.சரி சரி சீக்கிரம் ரெடி ஆய்ட்டு ஸ்டேஜ்க்கு வந்துருங்க..நா சீடி குடுத்துட்டு ப்ரெண்ட்ல தான் உக்காந்துருப்பேன்.”
“ஷுவர் மேம் உங்களை நம்பிதான் நாங்கள்.”
“ஜீவிகாவை நம்பினோர் கைவிப்படார்.”,என்றவள் ஆசீர்வதிப்பதைப் போல் செய்கை செய்துவிட்டு நகர்ந்தாள்.
அங்கு ஆடிடோரியத்திற்குள் நுழைவதற்குள் ஒரு வழியாகி விட்டாள்.அத்தனை கூட்டம் சத்தம் ஆர்பாட்டமென அமர்க்களப்பட்டது அந்த இடமே!அவள் வாயிலைக் கடந்து உள்ளே நுழைய எத்தனித்த நேரம் ஒருமாணவன் வேண்டுமென்றே அவளை உரசிச் செல்லுவது போல் அருகில் வர லாவகமாய் நகர்ந்து திரும்பி நின்றவள் அவனைப் பார்த்து கைக்கட்டி நின்றாள்.