தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 14 - ஸ்ரீ
“பூவக்கேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மால கட்ட சொல்லும்
தீராததே ஆச வேறென்ன நான் பேச
என்னோடு நீ பாதி இல்லையே
நீ இல்லையேல் நானும் பொம்மையே
எந்தன் உயிரும் நீயே நீயே
மூணு முத்து வெள்ளி முத்து
நான் முடிஞ்சு வெச்சேன் முந்தநேத்து
தாலி கட்ட நெந்துகிட்டு
நா தவிச்சிருந்தேன் வழிய பாத்து
நீ போகும் வழியில் நிழல் நானாகி விழவா
தூங்காத விழியில் துணை சேர்ந்தாயே மெதுவா
ஒன்னும் புரியாம தாளம் தட்டுரேனே
சொல்லதெரியாம வாய கட்டுரேனே
ஆக மொத்தம் காதல் இது சரி தானே”
காலை வெயிலின் தாக்கத்தில் கண்விழிக்க முயன்ற ஆத்விக்கிற்கு தலை அத்தனை பாரமாய் இருந்தது.கடினப்பட்டு கண்விழித்த நேரம் ஒரு பெரிய பக்கெட்டின் மொத்த தண்ணீரையும் அவன் மீது கொட்டியிருந்தாள் ஜீவிகா.
அவசரமாய் மூச்சுத் திணற எழுந்தமர்ந்தவன் நடப்பது புரியாமல் முகத்தின் நீரை இரு கைகளாலும் துடைத்தவாறு திருதிருவென முழித்தான்.
“ஏன்டா குடிகார குரங்கு என்ன இரண்டு ஆடுல ஒரு ஆடு முழிச்ச மாதிரி முழிச்சுட்டு உக்காந்துருக்க?”
“ஜீ!!!நீ என் ரூம்ல என்ன பண்ற??”
“ம்ம் பல்லாங்குழி விளையாடுறோம் நானும் உன் மச்சானும்..ஒரு கை குறையுது வரியா?”
கைகளை இடுப்பில் வைத்தவாறு அவள் முறைத்து நிற்க ஆத்விக்கை பார்த்த ஜெயந்திற்கோ ஒரு நொடி சிரிப்பே வந்துவிட்டது.கண்களை மூடிமூடி திறந்தவாறு தன்னிலை பெற முயன்றவன் ஓரளவு அதில் வெற்றியும் கண்டான்.மெதுவாய் முந்தைய நாளின் விஷயங்கள் அனைத்தும் புரிய வந்தது.
அந்த கவலை அப்பட்டமாய் முகத்தில் பிரதிலிக்க சுற்றும் முற்றும் பார்த்தவன் இருக்கும் இடத்தை உணர்ந்து கொண்டான்.அவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்க்க கூடத் தோன்றாமல் தலை குனிந்தவாறே அமர்ந்திருந்தான்.
“சாரி மச்சான்..சாரி ஜி…”
“விடு ஆத்விக்..இப்போ எப்படியிருக்க சூடா சாப்பிட எதாவது வேணுமா?”
“ம்ம் எரியுற கொள்ளிக்கட்டையை எடுத்துட்டு வந்து வாய்ல வைங்க..ஏன்ங்க நீங்க வேற..”
“ஏன்டா எரும என்ன பண்ணி வச்சுருக்கனு புரியுதா..என்னடா இதெல்லாம்..அங்கிள் ஆன்ட்டியை பத்தி நினைச்சு பார்த்தியா?”
“தப்பு தான் ஜி..ஆனா நேத்து ஷான்யா பேசினதெல்லாம் தாங்கிக்கவே முடில அதுவுமில்லாம அங்கிள்க்கு எதாவது ஆச்சுனா அதுக்கு நான் தான காரணமா இருப்பேன் கண்டிப்பா..ரொம்ப கில்டியா இருக்கு ஜி..”,என்றாவனின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
“ஆத்வி டேய் என்ன டா இது..அவருக்கு அதெல்லாம் ஒண்ணும் ஆகாது..ஏன் தேவையில்லாதத யோசிச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்குற..லவ் னா இப்படி பிரச்சனை எல்லாம் வராம இருக்குமா சொல்லு..நாங்க எல்லாம் உன்கூட இருக்கோம் அப்பறம் என்ன?
போ போய் ரிப்ரெஷ் ஆய்ட்டு வா..அம்மா அப்பா தேடிட்டு இருப்பாங்க உன்னை..வீட்டுக்கு கிளம்பு முதல்ல அப்பறம் அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்…”
“ஜீவி சொல்றது கரெக்ட் தான் வா ஆத்வி..வீட்டுக்கு போய்ட்டு அப்பறம் போய் அவரை பார்த்துட்டு வரலாம்..கிளம்பு..”
“சாரி மச்சான் உங்களுக்கு தேவையில்லாத சிரமத்தை கொடுத்துட்டேன்.ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க..”
“ஆத்வி ஏன் பெரிய வார்த்தையெல்லாம் பேசுற..கஷ்டத்துல கூட இல்லனா அப்பறம் எதுக்கு ப்ரெண்ட்ஸ் சொல்லு..உனக்கு பண்ணாம யாருக்கு பண்ண போறேன் வா முதல்ல..”
நிச்சயமாய் ஆத்விக் குற்றவுணர்வோடு கூடிய நெகிழ்ச்சியில் தான் இருந்தான்.நல்ல பெண் நட்பு கிடைப்பது என்பது வரம்.அவளின் திருமணத்திற்குப் பின்னும் நட்பில் எந்த விரிசலும் இல்லாமல் இருப்பது பாக்கியம்.ஆனால் அவனின் கணவனும் தங்கள் நட்பை உணர்ந்து தன்னை அவன் நண்பனாக பாவிப்பது என்பதெல்லாம் சொல்லில் அடங்கா பெரு வரமே.
அதற்கு மேலும் அவனை அநாவசியமாக எதையும் சிந்திக்க விடாமல் இருவருமாய் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.காரில் செல்லும் போது தன் கைப்பேசியைப் பார்த்தவன் முந்தைய நாள் இரவில் ஷான்யாவின் அழைப்பிற்கான நோட்டிபிகேஷனைப் பார்த்தான்.
“ஜி ஷான்யா கால் பண்ணிருக்கா நேத்து நைட்!!”