"நான் பேசினதில் என்ன தப்பும்மா.. நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? என்னால மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது.." என்று சொல்லி அர்ச்சனா அங்கிருந்து சென்றுவிட்டாள்.
"யாதவி அர்ச்சனாவை பத்தி தான் உனக்கு தெரியுமே, அவ பேசறதெல்லாம் பெருசா எடுத்துக்காத.. அவ சார்பா நான் உன்கிட்ட் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.." என்று மஞ்சுளா சமாதானம் பேச,
"அய்யோ அதெல்லாம் வேண்டாம் ம்மா.. உப்பு சாப்பிட்டா தண்ணீர் குடிச்சு தான் ஆகணும்.. என்ன இருந்தாலும் நான் ஒரு தப்பை துணிஞ்சு செஞ்சுட்டேனே, அதுக்கு இப்படிப்பட்ட பேச்செல்லாம் கேட்டு தானே ஆகணும்.. அதுக்கு நீங்க ஏன் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்.. என்று சொன்ன யாதவிக்கு, அவளை மீறி கண்களில் இருந்து கண்ணீர் வரவும், உடனே தனதறைக்குச் சென்றுவிட்டாள்.
அவள் இதுநாள் வரை பயந்தது இதற்காக தானே, அவள் செய்த காரியத்தின் வீரியம், அவள் கற்பையே சந்தேகிப்பார்களே, அதற்காக தானே யாரையும் சந்திக்க துணிவில்லாமல், மறைவு வாழ்க்கை வாழ்ந்தாள். இப்போது அந்த பேச்சு வந்துவிட்டதே, மனது பொறுக்காமல் தவித்தவள், அந்த நேரம் அந்த வீட்டில் இருக்க முடியாதவளாக கிளம்பி வெளியே சென்றாள்.
அவள் வெளியே சென்றதை மஞ்சுளாவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். இங்கு வந்த இந்த சில நாட்களில், இதுபோல் அவள் கோவிலுக்கோ இல்லை கடைத்தெருவிற்கோ சொல்லிவிட்டு கிளம்பிச் செல்வாள். இன்று அவளின் மனம் அர்ச்சனாவின் பேச்சால் சங்கடத்திற்கு உள்ளாக, ஏனோ சொல்லாமலேயே கிளம்பிச் செல்கிறாள். சரி வெளியில் சென்றாலாவது அவள் மனம் சமாதானம் ஆகும், என்று மஞ்சுளாவும் இருந்துக் கொண்டார்.
ஆனால் எப்போதும் வரும் நேரத்தை விட அதிக நேரமாகியும் யாதவி வரவில்லை, இதில் இருட்ட வேறு தொடங்கவும், இன்னும் அவள் வராதது மஞ்சுளாவிற்கு பயத்தை கொடுத்தது. சாதாரணமாக சென்றிருந்தால் பரவாயில்லை, அவள் வேறு வருத்தத்துடன் சென்றதால், வேறு ஏதாவது முடிவெடுத்து சென்றிருப்பாளோ, என்று நினைத்து பயந்தவர், யாதவியின் அலைபேசி எண் வேறு அவருக்கு தெரியாததால், உடனே விபாகரனுக்கு விஷயத்தை சொல்வது தான் சரியென்று பட, அவனுக்கு அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்று அவன், "சொல்லுங்கம்மா.." என்றதும்,
"விபு.. வெளிய போன யாதவி இன்னும் வீட்டுக்கு வரலப்பா.." என்று பதட்டத்தோடு கூறினார்.
"என்னம்மா சொல்றீங்க.. யாதவி எங்க போனா?"
"எப்போதும் கோவில், கடைக்குன்னு சொல்லிட்டு போவா.. கொஞ்ச நேரத்தில் வந்துடுவா.. ஆனா இன்னைக்கு போய் ரொம்ப நேரமாகுது, இன்னும் வரல, அவளோட போன் நம்பரும் எனக்கு தெரியாதுப்பா.." என்று கூற,