தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 20 - ஸ்ரீ
“வைத்த கண் வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்
தைத்த முள் தைத்தது தானோடி
சொக்கியே போகின்றாய்
அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க
அவசரம் நீயும் பூப்பூக்க
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே
ஹா யாரோ எந்தன் மனசின் நடுவிலே
ரோஜா தோட்டம் வைத்தது
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்
உந்தன் கால் தடம்
யாரோ எந்தன் உயிரின் அறையிலே
கவிதை புத்தகம் படித்தது
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே
உந்தன் வாசனை”
மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய போட்டோ ஷீட் ஒரு மணி நேரம் ஆகியும் முடிந்த பாடில்லை.ஆத்விக் ஷான்யா மட்டுமல்லாது மணமக்களின் நண்பர்களை வைத்து போட்டோ எடுக்க வேண்டுமென வித விதமாய் போட்டோகிராபர் ஜீவி ஜெயந்த் ரினிஷா ரேஷ்வாவை வைத்து போட்டோ எடுத்துத் தள்ளினார்.அதுவும் ஒரு முன்னனி ஹீரோ மணமகனின் நண்பன் என்று தெரிந்த பின் தனக்கான விளம்பரத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டிருந்தான்.
“டேய் போட்டோகிராபர் அண்ணா..ப்ளீஸ் யா வீட்டுருங்க..என் கல்யாணத்துக்கு கூட நான் இத்தனை போட்டோ எடுக்கல..உங்களுக்கு என்ன இந்த ஹீரோ போட்டோவை போட்டு பேமஸ் ஆகணும் அவ்ளோ தான நாளைக்கு கல்யாணம் முடிஞ்சவுடனே இவரை உங்க கையில ஒப்படைச்சுரேன்.என்ன வேணா பண்ணிக்கோங்க..எங்களை இப்போ விட்டுருங்களேன்..”
ஜீவியின் பேச்சில் தலையை சொரிந்தவாறே அவர் அங்கிருந்து நகர்ந்துவிட ரினிஷா விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
“ஜி பாவம் அவரு மூஞ்சியை பாரு..”