“அப்படி நிலா இப்போவே எங்க கூட வரானா நாங்க அவள சந்தோஷமா கூட்டிட்டு போவோம்.” என்று நிஷாவை பார்த்துக் கூறிவிட்டு, “என்னமா நிலா எங்க கூட வந்துடுறியா” என்று சிறு குழந்தையை அழைப்பது போல் கேட்டார் பானுமதி.
நிலாவிற்கு என்ன கூறுவது என்று தெரியாமல் தர்ம சங்கடமான நிலையில் இருந்தாள்.
அதற்குள் காபி தட்டுடன் உள்ளே நுழைந்த சிவகாமி, “அப்படி எல்லாம் எங்க பொண்ண சும்மா அனுப்பிட மாட்டோம், ராணி மாதிரி கல்யாணம் செஞ்சி கொடுத்துத்தான் அனுப்புவோம்” என்று கூறிக் கொண்டே அவர்கள் அருகில் வந்தார்.
“இப்போவே என் மருமக ராணி மாதிரிதான் இருக்கா” என்று கூறிக் கொண்டே நிலாவிற்கு திரிஷ்ட்டி முறித்தார் பானுமதி.
நிலாவிற்கு அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்கும் போது தலையே சுற்றுவது போல் இருந்தது.
அவளை தவிர அங்கிருந்த அனைவரும் இந்த கல்யாணம் முடிந்து விட்டது போல் உரிமையாகப் பேசினர். இன்று எப்படியாவது அவனுடன் பேசி தன் நிலைமையைப் புரிய வைத்து விடவேண்டும். இவர்கள் யாரும் இனி என் பேச்சைக் கேட்கப் போவதில்லை என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தாள் நிலா.
“இந்த நிலா” என்று காபி தட்டை நிலா விடம் நீட்டி “வெளியே எல்லாம் wait பண்றாங்க வா” என்று சொல்ல அனைவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.
நிலாவிற்கு ஒரு வகையான பதற்றம். அவள் இது வறை அனுபவிக்காத ஒரு பதற்றம், முதல் முறையாக ரகுவை பார்க்கப் போகிறாள். என்னதான் பிடிக்கவில்லை என்று கூற வேண்டும் என்று இருந்தாலும், அவனைப் பற்றி மற்றவர்கள் கூறியதை எல்லாம் கேட்டு அவளுக்குள் ஒரு ஆவல், அவனைப் பார்ப்பதற்கு.
அறைக்கு வெளியே ஒரே சலசலப்பு. வெளியே வந்த பானுமதி, தன் கணவன் பக்கத்தில் சென்று அமர்ந்தார். நிலாவின் கண்கள் அங்கிருந்தவர்கள் அனைவரையும் ஒரு நோட்டம் விட்டது. அந்த கூட்டத்தில் ரகுவை கண்டுபிடிப்பது அவளுக்கு ஒன்றும் கடினமாக இல்லை. எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக, முகத்தில் ஒரு சிறு புன்னகையோடு அமர்ந்திருந்தான் ரகு.
முதல் முறையாக அவனைப் பார்க்கிறாள். “ஆமா எல்லாரும் சொன்ன மாதிரி smartஅ தான் இருக்கான்” என்று அவள் மனதில் நினைத்துக் கொண்டு அவனை இன்னும் ஆழமாகப் பார்க்கும் போது “இவனை எங்கையோ பார்த்திருக்கிறோமே. இவன் முகம் அவ்வளவாக