தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 04 - சித்ரா. வெ
காலையில் இருவரும் ஜோடியாக கோவிலுக்கு கிளம்ப, இப்போது நித்யா மட்டும் தனியாக ஆட்டோவில் வந்து இறங்கியதை பார்த்த குறிஞ்சியம்மாள், நித்யா வீட்டுக்குள் நுழையவும்,
"நித்திம்மா.. என்னடா தனியா வர.. கார்த்தி எங்க? ரெண்டுப்பேரும் ஒன்னா தானே கோவிலுக்கு போனீங்க? அப்படியே எங்கேயாச்சும் வெளிய போயிட்டு வருவீங்கன்னு பார்த்தா, நீ வீட்டுக்கு வர.. உன்னை தனியா ஆட்டோவில் அனுப்பிட்டு அவன் எங்க போனான்?" என்றுக் கேட்டார்.
"மாமாக்கு ஆஃபிஸ்ல ஏதோ முக்கியமான வேலையாம் பாட்டி.. காலையில் போகும் போதே, கோவிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடலாம்னு சொல்லி தான் கூட்டிட்டு போனாங்க.. ஆனா அதுக்குள்ள அவங்களுக்கு போன் வரவும் என்னை வீட்டுக்கு போகச் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.."
"அப்படி என்னத்தான் அவசரமோ.. முக்கியமான வேலையா இருந்தா போயிட்டு வந்து உன்னை வெளிய கூட்டிட்டு போயிருக்கலாமில்ல.. அவசரம்னு உன்னை தனியா வீட்டுக்கு அனுப்பியிருக்கான்.. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பாரு.. வழியில் எந்த பிரச்சனையும் இல்லாம தானடா வந்த.."
கோவில் வாசலிலேயே ஆட்டோ ஏறி வீட்டுக்கு வந்தாலும், எந்த வழியாக வீட்டுக்கு போகிறோம் என்பது கூட அவளுக்கு தெரியவில்லை, பாட்டியும் அன்னையும் வழக்கமாக போகும் கோவில் இல்லாமல் கார்த்திக் வேறு கோவிலுக்கு கூட்டிக்கொண்டு சென்றதால், அந்த வழி அவளுக்கு புதிதாக இருக்கவும் பயத்தோடு பதட்டத்தோடும் தான் வீட்டுக்கு வந்தாள்.
ஆனால் அதையெல்லாம் குறிஞ்சியம்மாளிடம் சொல்லாமல், "ஒன்னும் பிரச்சனை இல்லை பாட்டி.. கையில் காசு இருக்கு, கோவிலில் ஆட்டோ ஏறி வீட்ல வந்து இறங்கிட்டேன்.. அப்புறம் என்ன பிரச்சனை இருக்கப் போகுது.." என்று பதில் கூறினாள்.
அந்த நேரம் பார்த்து ஞானசெல்வம் அங்கு வரவும், "நித்திக்கூட கோவிலுக்கு போன கார்த்தி, அவளை தனியா வீட்டுக்கு அனுப்பிட்டு ஆஃபிஸ்க்கு போயிட்டானாமே.. அப்படி அங்க என்ன முக்கிய வேலை செல்வம்.." என்று குறிஞ்சியம்மாள் கேட்கவும்,
"தெரியலையே ம்மா.. அவன் எதுவும் என்கிட்ட சொல்லலையே, சொல்லியிருந்தா நானே போயிருப்பேனே.." என்று சொல்லியப்படியே, கார்த்திக்கிடம் பேச அலைபேசியில் அவனை அழைத்தார்.
ஆனால் தொடர்ந்து மணியடித்தும் அவன் அந்த அழைப்பை ஏற்காததால், "சைலண்ட்ல போட்டு வச்சிருக்கான்னு நினைக்கிறேன்.. நான் வேணா போய் பார்த்துட்டு வரேன்.." என்று சொல்லி அவர் கிளம்ப பார்க்க,
"இல்ல செல்வம்.. நீ போக வேணாம்.. சம்பந்தி வீட்டுக்காரங்க ஊருக்கு கிளம்பிக்கிட்டு