சென்றாள்.
முன்பே குறிஞ்சியம்மாளும் ஞானசெல்வமும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வஞ்சி அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தவர், மகளின் வரவையும் அவளது அலங்காரத்தையும் பார்த்தவர்,
"நித்தி.. கார்த்திக் வந்து உன்னை எங்கேயாச்சும் வெளிய கூப்பிட்டிட்டு போறதா சொன்னானா.." என்றுக் கேட்டார்.
அதற்கு அவள் பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழிக்க, "வஞ்சி புதுசா கல்யாணம் ஆனவங்க கிட்ட கேட்கும் கேள்வியா இது.. வெளிய போனா தான் தலைசீவி பூ வச்சிக்கணுமா.. இது கூட தெரியாம.." என்று குறிஞ்சியம்மாள் சொல்லவும், அப்போது தான் புரிந்தவராக வஞ்சி தலையில் அடித்துக் கொள்ள, ஞானசெல்வம் குனிந்தப்படி சிரித்துக் கொண்டார்.
"அய்யோ சாப்பிட்டு போய் இதெல்லாம் செய்திருக்கலாமோ.." என்று வெட்கத்தோடு அவள் நின்றிருக்க,
"என்ன நித்தி அங்கேயே நிக்குற.. வா வந்து சாப்பிடு.." என்று குறிஞ்சியம்மாள் அவளை தன்னருகே அமர்த்திக் கொண்டார்.
யாரது முகத்தையும் பார்க்க தயக்கம் கொண்டு குனிந்தப்படியே அவள் சாப்பிட்டு எழவும், அதே நேரம் கார்த்திக்கும் விரைவிலேயே வேலை முடித்து வீடு திரும்பியிருந்தான்.
அதிகப்படியான சோர்வுடன் வந்திருந்தவனுக்கு மனைவியின் வசீகர தோற்றத்தை பார்த்ததும் சோர்வெல்லாம் நீங்கவும், அவளை ரசனையோடு பார்த்தப்படியே அவர்கள் அருகில் வந்தான்.
"கார்த்திக் ரொம்ப டயர்டா தெரியுற.. ப்ரஷ் ஆயிட்டு வந்து சாப்பிடுப்பா.." என்று ஞானசெல்வம் சொல்லவும்,
"இதோ ப்பா.." என்று சொல்லியப்படி அவன் அறைக்குச் செல்ல, நித்யா பின்னாலேயே செல்லவும், அதை பார்த்திருந்த பெரியவர்களின் மனமும் நிறைந்துப் போனது.
குளிக்கச் சென்றவனுக்கு துண்டு எடுத்துக் கொடுத்தவள், அவன் குளிக்கச் சென்றதும், அவனுக்கு இரவு உடையை எடுத்து வைத்தாள்.
வேகமாக குளித்து வந்தவன், இரவு உடைக்கு மாறி, சாப்பிட செல்ல, அவள் பின்னாலேயே சென்றவளிடம், "நித்தி நீ இங்கேயே இரு.. நான் சீக்கிரம் சாப்பிட்டு வந்துட்றேன்.." என்று சொல்லி அவன் மட்டும் சென்றான்.
அதற்கு சிரித்தப்படியே தலையாட்டிக் கொண்டவள், அவன் சென்றதும் ஞாபகமாக அந்த வாசனை திரவியத்தை தன் உடல் முழுதும் அடித்துக் கொண்டு, ஒரு இன்ப பரவசத்தோடு அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.