இருக்காங்க.. ஏற்கனவே உன்னோட மாமனார் தையாத்தக்கான்னு குதிச்சிக்கிட்டு இருக்காரு.. இதில் அவங்க ஊருக்கு கிளம்பும் போது நீங்க ரெண்டுப்பேரும் வீட்ல இல்லன்னா, எங்க உறவே வேண்டாம்னு முடிவு செஞ்சுட்டீங்களா? அப்படி இப்படின்னு பேசிட்டு கிளம்புவாரு..
பிள்ளைங்க கல்யாணத்துக்கு வந்தவங்க, எதுக்கு மனசு கஷ்டமா போகணும்.. அதனால நீ இங்கேயே இரு.." என்று குறிஞ்சியம்மாள் சொல்லவும், அவரும் சரி என்று ஒத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.
அவர்கள் பேச்சை கேட்டப்படி நித்யா அங்கேயே நின்றுக் கொண்டிருக்க, அவள் பிரச்சனையில்லை என்று சொன்னாலும், இங்கு வந்ததிலிருந்து அவள் எங்கும் தனியாக வெளியில் சென்றதில்லை என்பது அவருக்கும் தெரியும் தானே, அவளது முகம் வேறு தெளிவில்லாமல் இருக்கவே,
அவள் அருகில் சென்று, "வேலையெல்லாம் அம்மா பார்த்துப்பாங்க.. நீபோய் உன்னோட ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா.." என்று அவள் கொண்டு வந்த விபூதி பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டே கூற, அவளும் சரியென்று கிளம்பினாள்.
பாட்டி சொன்னதுக்காக சிறிது நேரம் ஓய்வெடுத்தவள், பின் தன் அன்னைக்கு வேலையில் உதவி செய்தப்படி இருந்தாலும், ஒருபக்கம் காலையில் நடந்தது அவளது ஞாபகத்தில் இருந்துக் கொண்டே இருந்தது.
அர்ச்சனை பொருட்கள் வாங்குவதற்கும், விளக்கேற்றுவதற்குமே சரியாக செய்யவில்லை என்று கார்த்திக் மாமாவிடம் திட்டு வாங்கியவள், இன்னும் வேறு எதற்கெல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்குமோ என்ற கவலையுடனே வேலை செய்துக் கொண்டிருந்தாள்.
மதியம் வந்த விருந்தினர்களெல்லாம் சாப்பிட்டுவிட்டு கிளம்ப ஆயத்தமாக, இன்னும் கார்த்திக் வரவில்லை, அனைவரும் விமானத்தில் தான் செல்ல வேண்டுமென்பதால் நேரத்தோடு செல்ல வேண்டும், கார்த்திக்கின் அன்னை வழி உறவினர்கள் என்பதால், அவன் அன்னையும் உயிரோடு இல்லாத பட்சத்தில் கார்த்திக் தானே இப்போது இரண்டு குடும்பத்தையும் இணைத்திருக்கும் பாலம், அதனால் அவன் வருவதற்காக காத்திருந்தனர்.
காலையிலிருந்து இரண்டு மூன்று முறை அழைத்தும் அவன் அலைபேசியை எடுக்கவில்லை, இருந்தும் மீண்டும் ஒருமுறை முயற்சித்து பார்ப்போம் என நினைத்த குறிஞ்சியம்மாள், அவனது அலைபேசிக்கு அழைப்பு விடுக்க, இந்த முறை அவரை ஏமாற்றாமல் அவன் அந்த அழைப்பை ஏற்றிருந்தான்.
"சொல்லுங்க பாட்டி.."
"புதுசா கல்யாணம் ஆன மாப்பிள்ளைக்கு ஆஃபிஸ்ல என்னடா வேலை.."