ஒத்துபோவாள் என்று இப்போது தோன்றவில்லை”
“எதில் பொருத்தமில்லாமல் போயிற்று… அவள் பள்ளி படிப்பு மட்டுமே முடித்தவள் என்பதிலா…?”
“அது பிரச்சினை இல்லை. தேவைப்பட்டால் இங்கு வந்துகூட படிப்பை தொடர வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவளுக்கு அந்த கிராமத்தை விட்டுவரவே மனமில்லை””
“கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும். ம்… அம்மா அப்பா பார்த்த பெண் என்றாலும் நீயும் தனியாக அங்கேபோய் பார்த்துவிட்டுதானே வந்தாய்.”
ஆமாம் அவனும் அவளை பார்த்தான்தான். அவளுடைய கிராமத்திற்கே சென்று பார்த்தான். கிராமத்தின் நுழைவாயிலிலாக இருந்த புளியந்தோப்பில் வைத்து அவளை முதன்முதலில் பார்த்தபோது அந்த கிராமிய தோற்றம் அவனுக்கு பிடித்திருந்தது. சண்முகம் தாத்தா வீட்டின் வழி கேட்டு அங்கே நின்றான்.
“அக்கா, சம்முவை பார்க்கணுமாம். ரூட் கேட்கறாங்க” என்று ஒரு வாண்டு அவளிடம் எடுத்து கொடுக்க, அவள்தான் வழி சொன்னாள்.
“சம்மூவை கேட்டேன்னு சொல்லுங்க.” என்று சொல்லி அனுப்பினாள்.
“சொல்றேன்… நீங்க யாருன்னு அவர்கிட்ட சொல்லணுமே”
“நாந்தான்… ஆதீதீ அப்படின்னு சொல்லுங்க”
அதிதி இவள்தானா? ஆனால் அவளுடைய பெயரை சொன்ன விதம் சரிதான். இப்போது அவள் பக்கத்தில் சென்றாலே ‘ஆ… தீ… தீ’ என்று கத்தும் அளவிற்கு நெருப்பை சுமந்து நிற்கிறாளே!
ஆனால் அப்போது அதிரதனுக்கு அது புரியவில்லை. அவளுடைய எளிமையான தோற்றமும் பளிச்சென்று இருந்த முகமும் அவனுக்கு பிடித்து போயிற்று.
“உங்களிடம் எதையும் மறைக்கல அதிரதன். என்னுடைய பேத்தி பெரிய படிப்பு படிக்கலை. உங்க அளவிற்கு நாகரிகமாக பேச வராது. படக் படக்குனு பேசிடுவா. அப்புறம் அவளுக்கு யாரும் கிடையாது. நான் மட்டும்தான் உறவுன்னு சொல்லிக்க இருக்கேன். எனக்கு இந்த சம்பந்தத்தில முழு ஒப்புதல் கிடையாது. ஏனெனில் அவள் உங்களுக்கேத்த பொண்ணா இருப்பான்னு சொல்ல முடியாது. உங்க வீட்டில்தான் வந்து கேட்டுக் கிட்டே இருக்காங்க” என்று அவளுடைய தாத்தா கூறியதும் பிடித்திருந்தது. உடனேயே திருமணத்திற்கு சம்மதித்து விட்டான்.
மனப் பொருத்தம் இருந்தால் இந்த குறைகளையெல்லாம் சரி செய்து விடலாம் எண்று நினைத்தான். ஆனால் நிஜம் வேறாக இருக்கிறதே! அதிதிக்கு அவனை பிடிக்கவில்லை. விலக்கி வைக்கிறாள்…