அவளை அங்கிருந்து பிரித்து வந்த காரணத்தினால்தான் அவனை வெறுக்கிறாளா? இதுபற்றி அப்பாவிடம் பேசிப் பார்க்கலாமா? அவர் அவளுக்கு ஏதாவது அட்வைஸ் சொல்வார். இல்லையில்லை… அவருடைய மருமகள் பாசத்திற்கு அளவே இல்லை… இவனையே அந்த கிராமத்திற்கு சென்று வாழ வைத்தாலும் வைத்து விடுவார். இப்போதைக்கு இதுபற்றி வாய் திறக்காமல் இருந்தால் நல்லது.
அவள்தான் சொன்னாளே திருமணத்திற்கு முன்பே அவனை பிடிக்காது என்று… பிசாசு… பிடிக்கவில்லை என்றால் மறுத்து இருக்கலாமே.. ஏன் அவ்வாறு செய்யவில்லை?
அவனுடைய கேள்விக்கு மூன்றாம் நாள் விடை கிடைத்தது.
விடிந்து விடியாத காலை பொழுதில் அவன் வீட்டு வாசலில் ஒரு சிவப்பு நிற கார் வந்து நின்றது. அந்த காரின் வண்ணத்திற்கு சற்றும் குறையாத சிவப்பை கண்களிலும் கன்னங்களிலும் தேக்கி வைத்தவளாக தனுஜா காரிலிருந்து இறங்கினாள்.
“மாமா” என்று அலறியபடி வந்தவளை பார்க்கவும், தோட்டத்தில் இருந்த அதிரதன் தாவி குதித்து மாடிக்கு ஓடி விட்டான்.
ஐயோ… அவனுக்கு இருக்கும் ஒரே அத்தையின் அடாவடி மகள்!. அவள் லண்டனுக்கு சுற்றுலா சென்ற ‘கேப்’பில் அதிதியை கல்யாணம் செய்து கொண்டான். ம்… என்ன ஆச்சு? கொதிக்கின்ற எண்ணெய்க்கு தப்பி கொளுந்து விட்டெறியும் நெருப்பில் சிக்கிக் கொண்ட கதையாகி விட்டது அவனுடைய வாழ்க்கை.
இப்போதைக்கு அவனுடைய கல்யாணம் கந்தலான கதை அவளுக்கு தெரியாமல் இருந்தால் நல்லது. கண நேரத்தில் யோசித்து அதிதியின் அறைக்குள் நுழைந்தான். அவள் ஒத்துழைத்தால்தான் தனுவை திருப்பி அனுப்பி வைக்க முடியும்.
திடீரென்று அறைக்குள் நுழைந்தவனை அதிதி கேள்வியாக பார்த்துக் கொண்டு நின்றாள்.
“ஒரு ஹெல்ப்” என்று அவன் ஆரம்பிக்கும் முன் அவனை பிடித்து தள்ளிக் கொண்டு தனு உள்ளே வந்து விட்டாள். அதிதியை நோக்கி கத்த ஆரம்பித்தாள்.
“ஏய்… உன்னிடம் நான் எத்தனை முறை வார்ன் செய்தேன். என்னோட மாமாவை நீ கல்யாணம் செய்துக்க கூடாதுன்னு” அதை கேட்ட அதிரதன் அதிர்ந்தான்.
-‘அப்படினால் இந்த திருமண ஏற்பாடு பற்றி தனுவிற்கு தெரிந்து இருக்கும் போலியே. அவள் எச்சரித்தும் அதிதி அவனை ஏன் மணந்து கொண்டாள்?’
“என்னோட மாமாவிற்கு என்னைத்தான் பிடிக்கும். தேவையில்லாமல் தலையிட்டால் உன்னுடைய வாழ்க்கைதான் பாழாகும்னு சொன்னேன்ல”