போயிடுவான் என்று ஏமாந்து போயிட்டாளாம்… ஆக… தனுஜா… அதிதி… அத்தை இவர்களையெல்லாம் தாண்டி அவனுடைய வாழ்க்கையில் சிக்ஸர் விழுந்து கல்யாணம் நடந்துடுச்சு. சொந்த பந்தங்களுக்கு நடுவே அவன் மானம் காப்பாற்றப்பட்டு விட்டது. சவுண்ட்ஸ் குட்!’
[அந்த ‘சம்பவம்’ நடக்காமல் நின்று போயிருந்தாலும் அவனுக்கு அவமானம்தான்… அந்த கதையை பிறிதொரு நாள் சொல்கிறேன்…]
“அடிங்… இனியொரு முறை இங்க வந்து நின்னு கல்யாணம் காதல்னு பேசிட்டு இருந்தியானால் கொன்னே போட்டுடுவேன். காதலிக்கிறவன் இன்னொருத்தி கழுத்தில ஈ’ன்னு இளிச்சுகிட்டு தாலிகட்டுவானா? உண்மை தெரியாத லூசு… ஓடிப் போயிடு”
-‘ஈன்னு இளிச்சுகிட்டா… அதிரதா உனக்கு இந்த அவமானம் தேவையா? ஏதோ கண்ணும் மூக்கும் அழகா இருக்கு… ஆளும் அமைதியா அடக்கமா இருக்கிறாள் அப்படின்னு நினைச்சு… சே… இதுலே குளுகுளுண்ணு சிம்லாவிற்கு கூட்டிட்டுபோயி குல்மொகர் மரத்தடியில் அமர்ந்து கிடார் வாசிச்சுன்னு கனவு வேற…’
அவன் யோசிக்கும்போதே…
“இருடி… மாமாகிட்ட பேசி சீக்கிரமா விவாகரத்து வாங்க வச்சு…” என்று தனு சொல்லும்போது அதிதி வாயில் கை வைத்து காட்டினாள்.
“சும்மா வாயை மூட்டிட்டு போம்மா. உள்ளதையும் கெடுத்து வைக்காதே” என்ற அர்த்தம் அது.
இயலாமையுடன் தனுஜா வெடுக்கென திரும்ப… இரண்டு அடி பின்வாங்கி அறைக்கு வெளியே நின்றான். அவனை பார்க்கவும் முகத்தை மூடிக் கொண்டு அழுதபடியே தனு ஓடி விட்டாள்.
படாரென அறைக் கதவு சாத்தப்பட்டது.
“அப்பாடா, நீ வெளியே வந்திட்ட… இல்லையென்றால்…”
“என் முகத்துலயே அடி விழுந்திருக்கும் அப்படித்தானே” என்றபடி திரும்பினான்.
“என் செல்லம். வாடா போய் காபி குடிக்கலாம்” என்று அவன் தோளில் கை போட்ட அப்பா அவனை அழைத்து சென்றார்.
“அப்பா எனக்கு ஒரு சந்தேகம்.” அவருடன் நடந்தபடியே கேட்டான்.
“சொல்லுடா”
“எல்லோரும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சக்கரவர்த்தி… ராஜான்னு பெயர் வைக்கும்போது நீங்க மட்டும் எனக்கு அதிரதன்னு ஏன் வச்சீங்க”
“அது… சக்கரவர்த்தி ராஜாவெல்லாம் விட அதிரதன்தான் வீரன். போரில் முன் நிற்கும் தைரியம் உள்ளவனை மட்டுமே அதிரதன் ஆக்குவார்கள். ”