“பிடிக்காமல் எப்படி உன்னை கல்யாணம் செய்து கொண்டாளாம். நீ ஏதோ தவறாக கற்பனை செய்து கொண்டு பேசுகிறாய்.”
“அப்படியா நீ டைனிங் டேபிளில் வந்து பார்”
அன்று இரவு சாப்பாட்டு அறையில்… அதிதிதான் அனைவருக்கும் பரிமாறினாள். அவளே சமைத்த சத்தான கிராமிய ஊணவு வகைகள். சிரித்த முகத்துடன் அவள் உணவு பரிமாறியதுடன், அந்த உணவின் முக்கியத்துவத்தையும் மகிமாவிற்கு சொல்லி சொல்லி பரிமாறினாள்.
“பாப்பா இதையெல்லாம் சாப்பிட்டு நல்லா வளரும். எங்க ஊர் பக்கம் பிள்ளைதாச்சிகளுக்கு இதுபோல்தான் செய்து கொடுப்போம்” என்று சொன்னாள். அதேபோல மற்றவர்களுக்கும் பரிமாறினாள்.
அதிரதனுக்கு இதுபோல அவள் நடந்து கொள்வது பிடித்திருந்தது. அவனுடைய அம்மா கற்பகத்தையும் நன்றாக கவனித்துக் கொண்டாள். படுத்த படுக்கையாக இருந்த அவர்கள் இப்போது எழுந்து மெல்ல நடக்க ஆரம்பித்து இருக்க இவள்தான் காரணம். அவனுடைய வீட்டிற்கு அவள் தேவையானவள்தான். ஆனால்…
அப்போதுதான் கவனித்தான், அவன் அருகில் வரும்போது மட்டும் அவளுடைய கைகள் நடுங்கின. ஒரு தயக்கத்துடன் கரண்டி நீண்டது. அவளுடைய கண்களில் ஒரு வெறுப்பு இருந்தது. ஒரு அந்நியனிடம் நடந்து கொள்வதுபோல நடந்து கொள்கிறாள். ஏனாம்?
கேட்டு விடலாமா என்று நாவு துடிக்க நிமிர்ந்தால் கௌதம் அவனிடம் அமைதியாக இருக்கும்படி சைகை செய்து கொண்டிருந்தான். இவன் வேறு, இந்த அதிதிக்கு அடிஷனல் சப்போர்ட்…!
கடுகடுவென சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்றான். அவனுக்கு அடுத்த அறைதான் அதிதியுடையது. அந்த முதல் நாள் இரவிற்கு பின் அவனுடைய அறையில் அவளுக்கு இடம் தர அவன் விரும்பவில்லை… பால்கனியிலிருந்து பார்த்தால்அவளுடைய அறை ஜன்னல் தெரியும்.
அந்த ஜன்னலில் நிழலாட உற்று நோக்கினான்.அதிதி அங்கே நின்று என்ன செய்து கொண்டிருக்கிறாள்? அவளுடைய பார்வை ஆழமாக இருளில் நோக்கிக் கொண்டிருந்தது. அது அவளுடைய கிராமம் இருக்கும் திசை. அவளுடைய கண்களில் தெரியும் ஏக்கம் கிராமத்தை பிரிந்து வந்ததால் உருவாகியதா? அவள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறாளா அல்லது அங்கு வாழ்ந்த வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறாளா?