தொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி
இளவரசன் கிரண் தேவிக்காகக் கோட்டை வாயிலைப் பார்த்து காத்து இருந்தான்.
அக்பர், ப்ரித்விராஜ் மற்றும் ராணி கிரண் தேவி இருவரின் எண்ணப் போக்குப் புரிந்தவராகக் கோட்டைக் காவலைப் பலபடுத்தி இருந்தார். கோட்டை மதில் சுவருக்கு வெளியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாயிலிலும் ஆறு பேர் வீதம் நான்கு வாயிலிலும் காவலர்களை நியமித்து இருந்தார். மேலும் சிறு தாவரங்கள் அசைவிலும் அதை அடியோடு அழிக்கும் வகையில் வீரர்களை அங்கே அங்கே நிறுத்தி இருந்தார்.
இதை எல்லாம் இளவரசன் ப்ரித்விராஜ் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் மனம் முழுதும் “தாயே பவானி, ராணி கிரண் தேவி இதில் இருந்து எப்படியாவதுத் தப்பித்து வர அருள் புரி “ என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டு இருந்தது.
அப்போது கோட்டை வாயிலின் அருகே சலசலப்புக் கேட்க, ராணி ஜோதாவின் சிவிகைகள் வந்து இறங்கி இருந்தன.
அதை ஆச்சரியமாகப் பார்த்தது இளவரசன் மட்டுமல்ல. அங்கிருந்த வீரர்களும் தான். பொதுவாக முகலாய ராணிகள் அவர்களின் அரண்மனை விட்டு எங்கும் செல்லும் வழக்கம் கிடையாது. நிக்காஹ் முடிந்து அக்பரின் கோட்டைக்குள் காலடி எடுத்து வைப்பவர்கள், அவர்களின் மறைவிற்குப் பின் அவர்கள் உடல் கூட அந்த வாயிலைத் தாண்டாது.
ஜோதா ராணி அக்பரின் மனைவி, அதிலும் பிரியத்திற்கு உரிய மனைவி என்று அக்பராலேயே அறிமுகப் படுத்தப்பட்டவள். வேறு எந்த ராணிக்கும் இல்லாத சலுகை. ஜோதாவிற்கு மட்டுமே தனி அரண்மனை. அங்கிருந்து வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையோடு தான்.
ஆனால் அக்பரைக் காணவே , அவரின் அரண்மனைக்கே என்றாலும் அவளின் அரண்மனை விட்டு வெளியே வந்தது எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
சட்டென்று திகைப்பை விடுத்தவர்கள், உரிய மரியாதையுடன் வரவேற்றார்கள். அதே போல் அக்பருக்கும் தெரியபடுத்தச் சென்றார்கள்.
அவர்கள் சிவிகைகள் வாயிலில் நிற்கும்போது இளவரசனும் சென்று சேர்ந்து கொள்ளலாமா என்று யோசித்தான். வாய்ப்புக் கிடைத்தால் அரண்மனையின் உள்ளே சென்று ராணி கிரண் தேவியைத் தேடலாமே என்று எண்ணம். ஆனால் அங்கோ வாயிலேயே ராஜபுத்திர வீரர்கள் நிறுத்தப் பட்டு , அக்பரின் வீரர்களே கோட்டை உள்ளே சிவிகை சுமந்து சென்றார்கள். ராணியோடு வந்த சில பணிப்பெண்கள் மட்டுமே உள்ளே சென்றனர்.