“ராணி சீக்கிரம் ஏறு” என்று கிரண் தேவியை புரவியின் முன்புறம் ஏற்றிக் கொண்டான்.
காமினி சற்றுத் தயங்கினாலும் , வேறு வழியில்லாமல் ராம் சிங்குடன் பயணித்தாள்.
உதய்பூர் வரும் வரையில் வேறு எதுவும் பேசாமல் சென்றவர்கள், அங்கே சென்றவுடன் ப்ரித்வி கிரண் தேவியிடம்
“இங்கே இன்று இளைப்பாற விரும்புகிறாயா தேவி? அல்லது உன் வீட்டினரைக் கண்டு வருகிறாயா?” என்றுக் கேட்கவும்,
‘தேவையில்லை இளவரசே. நம் பயணத்தைத் தொடரலாம்” என்றுக் கூறினாள்.
இதுவரை அக்பரிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் வேகத்தைத் தவிர எதிலும் கவனம் செலுத்தாமல் சென்று கொண்டிருந்தவர்கள், தற்போது வேகம் குறைத்துக் கொண்டனர்.
“தேவி, நீ அக்பரிடம் இருந்து எவ்வாறு தப்பித்தாய்?” என்றுக் கேட்கவும், கிரண் தேவியின் எண்ணங்கள் முந்தைய தினத்திற்குச் சென்றது.
அக்பர் கிரண் தேவியின் மேல் கை வைக்கவும், என்னவென்று உணரும் முன்பே ராணி அவரைக் கீழே தள்ளி அவர் கழுத்தில் தன் குறுவாளை அழுத்தியதில் ஒரு கணம் திகைத்தார். ஆனால் அதற்குப் பின் தன் கூரிய கண்களால் ராணியைப் பார்த்தார்.
“பேரரசரே, பெண்கள் ஒன்றும் தங்கள் விருப்பபடி நடக்கும் உயிரில்லா பொருட்கள் அல்ல. விரும்பாத பெண்ணைத் தீண்டுவது என்பது என்னைப் பொறுத்தவரை நெருப்பைத் தீண்டுவதற்குச் சமம். ஒரு நேரம் அந்த நெருப்பு சுடவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் உயிரோடு எரிக்கும். “ என்றுக் கூறவும், அதற்கும் பதில் எதுவும் சொல்லவில்லை
அப்போது அந்த அறைக்குள் பஹீர் வரவும், நிலைமையை உணர்ந்து, தன் வாளை எடுத்தார். அதைக் கண்ட கிரண் தேவி,
“அமைச்சரே, தங்கள் வாளுக்கு தற்போது வேலை இல்லை. அதை உறையிலே போடுங்கள். இல்லையேல் பேரரசரின் தலை துண்டாகி விடும்”
பஹீர் திகைத்தாலும், கிரண் தேவிக் கண்களில் கண்ட உறுதியில் அவள் சொன்னதைக் கேட்டார்.
“பெண்ணே, பேரரசரைத் தாக்கி விட்டு நீ உயிருடன் இந்த வாசலைத் தாண்ட முடியுமா? இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் பெண்ணே” என்றார்.
“விளையாட்டுக்களில் கை தேர்ந்தவர் தங்கள் பேரரசர் தான் அமைச்சரே. நான் அல்ல. “