பேசாமல் இருவரும் கிளம்பினர்.
அவர்கள் விடிவதற்குள் அக்பரின் பதேபூரிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்ற முயற்சியில், காவல் வீரர்கள் உள்ள பகுதிகளில் செல்லாமல், காட்டு வழியிலேயே பயணம் செய்தனர்.
கிட்டதட்ட ஊர் எல்லை அருகே வரவும், அங்கே ராம்சிங் மற்றும் காமினி இருவரும் காத்து இருந்தனர். அருகில் இரண்டு புரவிகளும் இருந்தன.
அவர்களைக் கண்ட ப்ரித்விராஜ்,
“ராம்சிங், காமினி ஒன்றும் பிரச்சினை இல்லையே?” என்று வினவினான்.
“சிக்கல்கள் இல்லாமல் இருக்குமா இளவரசே? எப்படியோ கடந்து வந்து விட்டோம். இப்போது இன்னும் ஒரு நாழிகைக்குள் ஆம்பூர் எல்லையைத் தாண்டி விட்டால், அதற்குப் பின் சற்று நிதானமாகச் செல்லலாம்”
“எப்படிச் செல்வது ராம்சிங்? குறைந்த பட்சம் மூன்று நாழிகைகளாவது ஆகுமே?”
“இல்லை இளவரசே. நாம் பதேபூரில் சிக்கவில்லை என்றால், அக்பர் அடுத்து நம்மைத் தேடச் சொல்லும் இடம் ஆம்பூர் தான். அதையும் கடந்து விட்டால் அவர்களால் உதய்பூர் வரை வர இயலாது. வந்தாலும் நமக்கு நம்மிடம் பலம். இதோ புரவிகள் தயாராக இருக்கின்றன. வாருங்கள் புறப்படலாம்”
“புரவிகள் எப்படிக் கிடைத்தது ராம்சிங்?”
“என்றைக்கு இருந்தாலும் நமக்குத் தேவைப்படும் என்று தெரியும் இளவரசே. எனவே தான் பதேபூர் எல்லையில் நம் ஒற்றன் ஒருவனிடம் இரண்டு புரவிகளை தயார் நிலையில் வைக்கச் சொல்லியிருந்தேன்”
“மிக நன்று ராம்சிங். “ என்றுவிட்டு,
“போகலாமா தேவி?” என்று வினவினான் ப்ரித்விராஜ்.
“இரு புரவிகள் தானே இருக்கின்றன இளவரசே. இதில் எப்படி நான்கு பேர் பயணம் செய்ய முடியும்?” என்று கேட்டாள் ராணி கிரண் தேவி.
“ஆண்கள் ஒரு புரவியிலும், பெண்கள் ஒரு புரவியிலும் செல்லலாம் இளவரசி” என்றாள் காமினி.
இளவரசனோ “இல்லை, நானும் ராணியும் ஒரு புரவியிலும், நீயும், காமினியும் ஒரு புரவியிலும் ராம்சிங். ஒருவேளை நாம் எங்காவது பிரிய நேர்ந்தால் நேராக ராணாவின் கூடாரம் இருக்கும் அற்புத ஆரண்ய மலையில் அடிவாரத்திற்கு சென்று விடு” என்றுக் கூறிவிட்டு ,