தன் பணிப்பெண்களிடம்
“இங்கே நாம் இருக்கும் வரை, இந்தக் கரணி மாதா கோவிலைத் தினமும் சுத்தபடுத்தும் பொறுப்பை நாம் செய்கிறோம். கோவிலை ஒட்டி ஒரு அழகிய நந்தவனம் உருவாகுவதும் நம் பொறுப்பே. அத்தோடு கோவிலில் உள்ள சூகாக்களுக்கு பால் அளிக்க வேண்டும்.” என்றுக் கூறவும்
“உத்தரவு ராணி” என்றனர்.
அந்த வீரன் மற்றவர்களைக் குடிலை பலமாகக் கட்ட உத்தரவிட்டவன், ராணியிடம் திரும்பி
“ராணி, தாங்கள் தயைக் கூர்ந்து தனியாக எங்கும் செல்ல வேண்டாம். நந்தவன வேலைகளோ, மற்ற வேலைகளுக்கோ பணிப்பெண்களை மட்டுமே அனுப்புங்கள். தாங்கள் கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மட்டும் நடமாடுங்கள்” என்று வேண்டிக் கேட்க,
“சரி வீரரே” என்றாள் கிரண் தேவி.
ராணி கிரண் தேவிக்கும் ஏனோ அந்தக் கோவிலின் அருகே இருப்பது மனதிற்கு இதமாக இருந்தது. அந்த தேவியின் சன்னதியில் நிற்கும் போது போரைப் பற்றியக் கவலைகள் அனைத்தும் மறந்து விடுவதோடு, மனதிற்கு நிம்மதியையும் கொடுத்தது.
இவ்வாறு சில நாட்கள் செல்ல, போர் நிலவரம் என்ன என்று அறிவதற்காகக் காத்து இருந்தாள்.
இந்தக் கோவிலுக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு பட்சம் கழிந்த நிலையில், ஒருநாள் இரு குதிரை வீரர்கள் அந்தப் பக்கமாக வந்தார்கள்.
அவர்கள் யாரையோத் தேடுவது போலிருக்க, காவல் வீரர்கள் எச்சரிக்கை ஒலி எழுப்ப , அனைவரும் சட்டென்று குடில்களுக்குள் சென்று மறைந்தார்கள்
குடில்களுக்கு வெளிப்பக்கம் வட்ட வடிவத்தில் வீரர்கள் காவலுக்கு நிற்க, அந்தக் குடில்களும், தாங்களும் தெரியாதவாறு சிலக் காட்டுப் புதர்களை வளைத்து வேலி அமைத்தார்கள்.
வந்த வீரர்கள் சற்றுக் களைப்போடு அருகில் இருந்த சுனையில் நீர் அருந்தி, தங்கள் களைப்பைப் போக்கிக் கொண்டனர்.
பின் கரணி மாதா கோவிலுக்குள் வந்தவர்கள் அங்கே சூஹாவின் அணிவகுப்பைப் பார்த்து மிரண்டாலும், கோவில் உள்ளே சென்று துர்கையை வழிபட்டனர்.
வெளியே வந்தப் பின், வீரர்களில் ஒருவன் அருகில் இருக்கும் இடங்களைச் சுற்றிப் பார்த்தான்.