அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற ராணியின் வீரன், கிரண் தேவியிடம் அவர்களை ஒப்படைத்தான்.
கிரண் தேவியைக் கண்டதும்,
“ப்ரணாம் தேவி” என்றார்கள்.
“சொல்லுங்கள் வீரர்களே. என்னிடம் நேரிடையாகச் செய்தி அனுப்பியது யார்?” என்றுக் கேட்டாள்.
“ஜோதா ராணி தங்களுக்குச் செய்தி அனுப்பினார்” என, எல்லோரும் வியப்படைந்தார்கள்.
ஜோதா ராணி அக்பரின் மனைவி. ராணி ஜோதாவும், கிரண் தேவியும் சகோதரிகள் என்றுத் தெரியும். என்றாலும் இருவரின் தந்தைமார்களுக்கும் பகை இருப்பதும் அறிவார்கள். அவர் ஏன் ராணி கிரண் தேவிக்குச் செய்தி அனுப்ப வேண்டும் என்று யோசித்தார்கள்.
ராணியின் வீரர்கள் சற்று முன்னால் வந்து நின்று கிரண் தேவிக்குப் பாதுகாப்பாக நின்றுக் கொண்டார்கள்.
அதைக் கவனித்தாலும் ஜோதா ராணியின் வீரர்கள் அசையக் கூட இல்லாமல் நின்ற இடத்தில் அப்படியே இருந்தார்கள்.
“செய்தி என்ன வீரர்களே “
“ராணி , அக்பர் தங்களைத் தேடி படைகளோடு வருவதாகவும், தங்களை எப்படியாவது சிறைபடுத்தி சித்திரவதை செய்ய வேண்டும் என்று ஆத்திரத்தில் இருப்பதாகவும் தங்களிடம் சொல்லச் சொன்னார்கள். தங்களை அவர் சிறை எடுத்தால் தங்களுக்கு மிகுந்த ஆபத்து எனவும், தாங்கள் அவர் கைகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் கூறி அனுப்பினார்.”
“அவர் கைகளில் நான் மாட்டாமல் இருக்க வேண்டும் என்றால் நான் எங்குசெல்வது?”
“ஜோதா ராணி தங்களால் இயன்றவரை மஹா ராணாவிடம் சென்று சேர்ந்து விட வேண்டும். இயலாத பட்சத்தில் எளிதில் தங்களை அடைய முடியாதப் படி தாங்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். “
யோசனையோடு அவர்களைப் பார்த்தவள்,
“போரின் நிலவரம் பற்றிச் செய்தி உண்டா?” என்றுக் கேட்டாள்.
அவர்கள் சற்றுத் தயக்கத்தோடு
“போர் உக்கிரமாக நடைபெற்று வருகிறது ராணி” என்றனர்.