மற்றொருவன் “என்ன பார்க்கிறாய்?” என்றுக் கேட்டான்.
“இங்கே மனிதர்கள் நடமாட்டம் இருக்கிறது”
“எப்படிச் சொல்கிறாய்? மேலும் இது பிகானர் வம்சத்து மக்களின் தெய்வம். அருகில் அந்த மக்கள் இருக்கையில் , அடிக்கடி வருவது சகஜம் தானே”
“அது சாதாரணக் காலங்களில் நீ சொல்வது நடக்கும். ஆனால் இந்தப் போர்க் காலத்தில் வீரர்கள் போருக்குச் சென்று இருக்க, வீட்டுப் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது தான் வழக்கம். ஆனால் இங்கே அப்படித் தெரியவில்லையே”
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”
“கோவில் அம்மனுக்கு புதுப் பூக்களால் மாலை அணிவிக்கப் பட்டு இருக்கிறது. கோவில் சுத்தமும் கண்ணில் படுகிறது. அத்தோடு அந்த சூகாக்கள் அதிக நாட்கள் யாரும் வராமல் இருந்தால், மனிதர்களைப் பார்த்ததும் விலகி ஓடும். ஆனால் இன்றோ அவை சாதரணாமாகத் திரிகின்றன. “
“நீ சொல்வதும் சரிதான். இங்கே நடமாட்டம் இருக்கிறது என்றால் ஒருவேளை எதிரிகளாக இருக்குமோ?”
“இருக்காது. எதிரிகளாக இருந்தால் இத்தனை நேரம் கோவில் இப்படி இருந்து இருக்காது”
“உண்மையே. எனில், நாம் தேடி வந்த மகாரானாவின் புதல்வி தான் இங்கே அருகில் இருக்கிறாரோ”
“எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது. “
“என்றால் நாம் அவர்களை எவ்வாறு சந்திப்பது?”
முதல் வீரன் சற்று நேரம் யோசித்தவன், மகாரானாவின் போர் முழக்கமான “ஜெய் பவானி” என்று உரக்க முழங்க, அவனின் எண்ணம் புரிந்த இரண்டாம் வீரனும் “ஜெய் பவானி” என்றான். மூன்று முறை இவ்வாறுக் கூறவும், கிரண் தேவியின் வீரர்களுக்குச் சற்று நம்பிக்கை வந்தது.
எனினும் எச்சரிகையுடன் ஒரு வீரனை மட்டும் அனுப்பி, அவர்களை யார் என்று பார்த்து வரச் சொன்னார்கள்.
அந்த வீரன் சென்று புதியவர்களிடம் விவரம் கேட்க, தாங்கள் ராணி கிரண் தேவியைச் சந்திக்க வந்துள்ளதாகக் கூறினார்கள்.
என்ன காரணம் என்று வினவ, ராணியிடம் நேரில் கூற வேண்டும் என்றுக் கூறி விட்டார்கள்.