தொடர்கதை - காணாய் கண்ணே - 50 - தேவி
ப்ரித்விராஜ் டூரிலிருந்து திரும்பி ஒரு வாரம் ஆகிருக்க, அவனால் கிருத்தியுடனான நினைவுகளை மறக்க முடியவில்லை. வழக்கமாக அதிக நாட்கள் வீட்டில் தங்காதிருந்தால், வந்தவுடன் இரண்டு நாட்கள் வெளியில் எங்கும் செல்ல மாட்டான். வீட்டினுள் அம்மா, தங்கையுடன் வம்பிழுத்துக் கொண்டு இருப்பான்.
இந்த முறை வந்த அன்றே வேலைக்குச் சென்று இருந்தான். தாரிணியும், அவன் அம்மாவும் கேட்டதற்கு அவசர வேலைகள் இருப்பதாகச் சொல்லிச் சென்றான்.
ஆபீஸ்க்குச் சென்றவுடன், நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று செல்வம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அவரிடம் ஒப்படைத்தான். டெல்லியில் இருந்தே செல்வத்தின் அப்பாவின் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்து இருந்தாலும், அதன் விவரங்கள் அறிந்துக் கொள்ள எண்ணி இன்ஸ்பெக்டரிடம் பேசினான்.
செல்வத்திடம் அவன் அப்பா போதைப் பொருள் கடத்தியதுப் பற்றிய பேச்சுக்கள் காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதை வைத்தும், செல்வத்தின் நண்பர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் கைது நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார். இந்தக் கேஸ் விவரங்கள் மீடியாக்களில் முதலில் பரவி விட்டதால், செல்வத்தின் அப்பா இருந்த கட்சி அவரை கட்சியில் இருந்து நீக்கி இருந்தார்கள், எனவே வேறு எந்த அழுத்தமும் இல்லாது அவரைக் கைது செய்ய முடிந்தது என்றுக் கூறினார்.
விவரங்கள் தெரிந்துக் கொண்டப் பின் ப்ரித்விக் கிளம்ப, இன்ஸ்பெக்டர்
“ப்ரித்வி, தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப். நீங்க கிருத்திகாவைத் தொடரவும், பாதுகாக்கவும் ஒத்துக்கிட்டதால் தான், செல்வத்தின் மற்ற விவரங்கள் எல்லாம் எங்களால் தெரிந்துக் கொள்ள முடிந்தது. அதன் மூலம் போதை மருந்து நெட்வொர்க்கில் முக்கியக் குற்றவாளிகள் பலர் பிடிபட்டுள்ளனர். தேங்க்ஸ் “ என்றார்.
“இட்ஸ் ஓகே சார். இது என்னுடைய வேலையும் கூட” என்றுக் கூறினான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பிரதாப் வர, எழுந்து நின்று வரவேற்றார் இன்ஸ்பெக்டர். அவர் எக்ஸ்-மிலிடரி ஆபீசர் என்பதோடு இன்றைக்கும் அவர் போலீஸ்க்கு உதவியாக பல வேலைகள் செய்வதால், அவர் மேல் மிகுந்த மதிப்பு வைத்து இருந்தார்.
“ஹலோ சார், “ என்றுக் கை குலுக்க, பிரதாப்பும்
“ஹலோ இன்ஸ்பெக்டர்” என்று கை கொடுத்தார். பின் ப்ரித்வியைப் பார்த்து
“ஹாய் ப்ரித்வி, ரெஸ்ட் எடுக்காம, அதுக்குள்ளே வந்துட்டீங்க?” என்றார்
“கம்போர்ட் ட்ராவல் தானே சார். சோ டயர்ட் எல்லாம் அதிகம் இல்லை. நாம ரிபோர்ட் கொடுத்துட்டா , இன்ஸ்பெக்டருக்கு அவர் வேலை முடிக்க ஈஸியா இருக்குமில்லையா?