“திருமணம் பற்றி எல்லாம் பேசறீங்க? எனக்கு இன்னும் படிப்பு முடியல. அத்தோடு என் பெரியப்பா, அப்பா, அம்மா அவங்க விருப்பம் தான் எனக்கும். “ என்றுக் கூறினாள்.
“ஹ்ம்ம். எதிர்ப்பார்த்த பதில் தான். உன் படிப்பு முடியும் வரை உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஆனால் உன்னைப் பார்க்காமல் என்னால் முடியவில்லை. அதனால் தினம் தூரத்தில் இருந்து உன்னைப் பார்த்து விட்டுச் செல்கிறேன். உன் அருகில் வந்து பேச எல்லாம் மாட்டேன். அத்தோடு உன் படிப்பு முடியவும் . உன் வீட்டில் திருமணம் பற்றிப் பேசுகிறேன். ஆனால் எனக்கு வேண்டியது உனக்கு என் மீது விருப்பமா என்ற கேள்விக்குப் பதில் தான்”
என் வீட்டினரின் விருப்பம் தான் எனக்கும் என்று பதில் சொல்ல வந்தவளை, எதிரில் தெரிந்த உருவம் சட்டென்று இளவரசனாகத் தோன்றவும், அவள் வாய் தன்னை அறியாமலேயே
“எனக்கும் உங்கள் மேல் விருப்பம் தான் இளவரசே” என்றுச் சொன்னது. சொன்னப் பின்பே திடுக்கிட்டுப் பார்க்க, இப்போது ப்ரித்வியின் முகத்தில் சிறு புன்னகை. இது இளவரசனின் உருவத்தோடு இன்னும் அழகாகப் பொருந்திப் போக அவளால் அவனை விட்டுக் கண் எடுக்க முடியவில்லை.
அவளின் பதிலுக்காக முகத்தையே பார்த்து இருந்தவனுக்கு, அவளின் சம்மதம் என்ற சொல்லை விட, இளவரசே என்று அவள் அழைத்த அந்தச் சொல்லே பரவசத்தில் ஆழ்த்தியது. அவளின் அந்த பாவனையில் அவனின் உள்ளம் ஆனந்தத் தாண்டவம் ஆடியது.
அதற்கு மேல் வேறு எதையும் கேட்காத ப்ரித்வி, இவர்கள் ஆர்டர் செய்த காபி வரவும், குடித்துவிட்டு இருவரும் கிளம்பிர்கள்
அன்றிலிருந்து ப்ரித்வி இவள் காலேஜில் இருந்து வீடு திரும்பும் வழியில் மாலையில் அவளைப் பார்த்து விட்டுச் செல்வான். கிருத்தியும் பார்த்தும் பார்க்காத மாதிரிச் செல்வாள்.
இரண்டு மாதங்கள் கடந்து இருக்க, இன்னும் ஒரு மாதத்தில் காலேஜ் முடிந்து கடைசி செமஸ்டர் என்ற நிலையிலும், ப்ரித்வியின் மாலை விஜயம் மட்டும் தொடர்ந்து கொண்டு இருந்தது.
அப்படி ஒருநாள் ப்ரித்வி கிருத்தியைப் பார்த்து விட்டுத் தன் அலுவலகம் செல்ல, அங்கே பிரதாப் காத்து இருந்தார். அவரைப் பார்த்ததும் திடுக்கிட்டாலும், எதையும் காண்பித்துக் கொள்ளாமல்,
“ஹலோ சார். வாங்க “ என்று வரவேற்றான்.
பிரதாப் மெளனமாக தலை மட்டும் அசைக்கவும், என்ன என்று யோசித்தான். பின்
“சொல்லுங்க சார். ஏதாவது வேலையா? அதற்கு முன் என்ன சாப்படறீங்க” என்றுக் கேட்டான்.