தொடர்கதை - காரிகை - 09 - அமுதினி
அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும்
அது பெண்ணின் தொழில் இல்லையே
சரித்திரம் படைக்கவும் தரித்திரம் துடைக்கவும்
வருவதில் பிழை இல்லையே
நிலவினால் இருக்கும் களங்கத்தை
இவளது பெருவிரல் துடைத்து விடும்
உறங்கி கொண்டிருந்த பவித்ராவுக்கு உடலின் மேல் ஏதோ ஊறுவதை போன்ற உணர்வு உண்டானது. தூக்க கலக்கத்துடன் மெல்ல கண்களை திறந்தாள். முதலில் அந்த இருட்டில் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. மெல்ல கண்கள் அந்த இருளுக்கு பழகியதும் அவளின் அருகே தெரிந்த மாரியப்பனின் முகத்தை பார்த்தவளுக்கு என்னவென்று சொல்ல தெரியாத பயம் மனதை சூழ்ந்தது.
"மா....மாமா" அந்த இருளில் அவளின் அருகே அமர்ந்தபடி அவளை பார்த்து கொண்டிருந்த பளபளத்த அவனின் விழிகளை பயத்துடன் பார்த்தாள் பவித்ரா.
"என்ன பவித்ரா பயந்துட்டியா?" அவளின் தோள்பட்டையில் மேல் கையை வைத்து அழுத்தினான்.
அவள் உடல் பயத்தில் வியர்த்து முகம் வெளிற தொடங்கியது. எழ முயன்றவள் அவனின் அழுத்தமான பிடியால் நகர முடியாமல் இருக்க, அவன் மெல்ல அவளை ஆக்கிரமிக்க தொடங்கினான்.
ஏதோ தவறாக நடக்கிறது என்று உள்ளே ஒரு வேகம் உந்த அவனை பிடித்து தள்ள முயன்றாள் பவித்ரா.
"மாமா விடுங்க மாமா எனக்கு புடிக்கல. பயமா இருக்கு. வலிக்குது மாமா...விடுங்க" அவளின் மறுப்பை அவன் பொருட்படுத்தவில்லை.
"ஐயோ விடுங்க விடுங்க" இப்போது தன் இரண்டு கைகளால் அவனை அடிக்க துவங்கினாள். ஓங்கி அவளை அறைந்தான் மாரியப்பன் மாறி மாறி இரண்டு கன்னங்களிலும். அடுத்த சில நொடிகளில் எல்லாம் இருண்டு போக மயங்கி போனாள் பவித்ரா.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள் பவித்ரா அந்த ஜன்னலின் வெளியே தெரிந்த வானத்தை வெறித்து பார்த்தபடி. அவள் இதுவரை சொல்லியதை கேட்டே அதிர்ந்து போயிருந்த லக்ஷ்மிக்கு அவளின் இந்த அமைதி இதற்க்கு பின் தான் இன்னும் ஏதோ பெரிதாக வரப்போகிறது என உணர்த்தியது. அவளின் அமைதியை அவர் கலைக்கவில்லை. அவளே தொடர்ந்தாள்.