கொண்டு பேசினாள்.
"பள்ளிக்கூடம் போக எனக்கும் புத்தகம் எல்லாம் வாங்கணும்" மெல்ல மெல்ல தயங்கியபடி சொன்னவளை கண்ணம்மாவின் சுட்டெரிக்கும் பார்வை நிறுத்தியது.
"உனக்கெல்லாம் சோறு போடறதே தண்டம். இதுல பள்ளிக்கூடம் வேற கேக்குதா? அப்பறம் வீட்டு வேலை எல்லாம் யாரு செய்வா? உன்னை என் தலையில கட்டிட்டு போனாளே உங்க அம்மா அவ வந்து செய்வாளோ?" கண்ணம்மாவின் கத்தலில் ஒடுங்கி போனாள் பவித்ரா. கொல்லையில் இருந்த மரத்தினடியே வந்து அமர்ந்து கண்ணீர் விட்டவள் "பேசாமல் என்னையும் உன்கூடவே கூட்டிட்டு போயிருக்கலாம்ல மா....அத்தைக்கு என்னை புடிக்கவே இல்லைம்மா. மாமா... மாமா என்னென்னமோ பன்றாங்கமா. எனக்கு பயமா இருக்குமா" தான் மனதிற்குள் பேசுவது தன் அன்னைக்கு கேட்கும் என்ற நம்பிக்கையில் கண்ணீர் விட்டாள் பவித்ரா.
பள்ளி முடிந்து வீடு திரும்பும் பிள்ளைகளை வாசலில் நின்று பார்த்து கொண்டிருந்தாள் பவித்ரா. அவளுக்கு ஏக்கமாக இருந்தது. பக்கத்து கடைக்காரரிடம் கேட்டு தன்னுடைய தேர்வு முடிவை தெரிந்து கொண்டாள் பவித்ரா. எல்லாவற்றிலும் தொண்ணுறு சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாள். ஆனால் அவளுடைய மதிப்பெண் தாளை வாங்க கூட செல்ல முடியவில்லையே என்று வேதனையாக இருந்தது. அவள் அம்மா இருந்திருந்தால் இந்த மதிப்பெண்களை பார்த்து பூரித்து போயிருப்பார், அவரை பற்றி நினைக்கையிலேயே கண்களை கரித்தது.
"ஏய்ய்ய் பவித்ரா, எங்க போயி தொலைஞ்ச?" உள்ளே இருந்து கண்ணம்மாவின் குரல் கேட்கவும் தன்னுடைய கண்ணை துடைத்து கொண்டு வேகமாக உள்ளே ஓடியவள் கால்கள் தள்ளாட தலை சுற்றுவதை போல இருந்தது. அங்கிருந்த தூணை பிடித்து கொண்டு நின்றாள் பவித்ரா.
"அங்க இருந்து நான் காட்டு கத்தலா கத்திட்டு இருக்கேன். நீ இங்க என்ன நின்னுட்டே கனவு கண்டுட்டு இருக்கியா?" கத்திகொண்டே வந்தாள் கண்ணம்மா.
"இல்லை அத்த...லேசா மயக்கம் வர மாதிரி இருந்துச்சு அதான்" பவித்ரா சொல்லவும், "வரும் வரும் எல்லாம் வரும், வீட்டு வேலை பாக்க சொன்னா மயக்கம் வரும், வாந்தி வரும், எல்லாம் வரும்...சோம்பேறி கழுதை. போ, கொல்லையில் துணி ஊற போட்ருக்கேன். துவைச்சு காய போடு. நான் கறிக்கடை வரைக்கும் போயிட்டு வரேன். உமா வந்துருவா. வந்ததும் அவ துணி மாத்தி சாப்பிட எடுத்து கொடு. மாமா வரதுக்கு முன்னாடி நான் சமைக்கணும்" என்றவள் கூடையை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல கொல்லையை நோக்கி சென்றாள் பவித்ரா.