"என் அம்மா என்னை அனாதையா விட்டுட்டு போனது தான் என் வாழ்க்கையின் கொடிய நாட்கள்னு நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அதெல்லாம் இல்லைனு அதற்க்கு பின் வரப்போகிற நாட்கள் தான் எனக்கு காட்ட போகுதுனு எனக்கு தெரியாமலே போய்டுச்சு மா" அவளின் குரலில் வெறுமை இருந்தது. அது கடினப்பட்டு போயிருந்தது.
உடலை அசைக்க கூட முடியவில்லை பவித்ராவால். மெல்ல எழ முயன்றாள் அங்கிருந்த திண்டை பிடித்து கொண்டு. தட்டு தடுமாறி எழுந்து நின்றவளுக்கு மாரியப்பன் அவளருகே வந்தது மெல்ல நினைவிற்கு வந்தது.அவன் அடித்த பின் என்ன நடந்தது? ஏன் என்னால் எழுந்து நிற்க முடியவில்லை? புரியவில்லை அவளுக்கு.
தூரத்தே சேவல் கூவும் சத்தம் கேட்கவும் அய்யயோ அத்தை வந்தால் இன்னும் வாசல் பெருக்கவில்லை என்று திட்டுவார்கள் என்று பயந்தவள் மெல்ல கஷ்டப்பட்டு குளியலறையில் நுழைந்தாள். உடல் வலியில் அந்த குளிர்ந்த நீர் மேலும் வலியை கூட்டியது.
"அம்மா" கண்களில் கண்ணீர் பெருகியது. ஏன் எதற்கு என்று புரியாமல் அவள் கண்களில் வழிந்த கண்ணீர் தண்ணீரோடு கலந்து யாருக்கும் தெரியாமலே போனது.
"இந்த கழுதைக்கு என்ன கேடு வந்தது...அந்த சமையல் கட்டை விட்டு நகர மாட்டேங்குது" திட்டிக்கொண்டே வந்த கண்ணம்மா, மாரியப்பனின் கையில் அந்த தேநீர் கோப்பையை திணித்தாள். மாரியப்பன் விடுமுறை கழிந்ததால் கிளம்பி கொண்டிருந்தவன் ஒன்றும் தெரியாதவன் போல பேசினான். "விடு புள்ள. அம்மா இல்லாத பொண்ணு சும்மா வையாத" என்றவன் கிளம்பினான். அவன் கிளம்பியது தெரிந்ததும் தான் வெளியே வந்தாள் பவித்ரா.
ஏனோ அவனை பார்க்கவே பிடிக்கவில்லை பவித்ராவுக்கு. அவனை காணும் போது அவளுக்கு அவளையும் அறியாமல் உடல் நடுங்கியது. அவனிடம் இருந்து வந்த மதுவின் வாடை இன்னும் அவள் மேல் இருப்பது போல இருந்தது, எத்தனை குளித்தும் அந்த வாடை போகாதது போல உணர்ந்தாள்.
அடுத்த மூன்று நான்கு வாரங்கள் மாரியப்பன் வராமல் இருக்கவும் பவித்ரா சற்று இயல்பாக இருக்க தொடங்கினாள்.
"உமாக்குட்டி இந்த வாரம் பள்ளிக்கூடம் போக புது உடுப்பு அப்பறம் புத்தகம் எல்லாம் வாங்கணும். இன்னும் அஞ்சு நாள்ல பள்ளிக்கூடம் தொறந்துடுவாங்கள" உமாவுக்கு தலை சீவி விட்டபடி சொல்லிக்கொண்டிருந்தாள் கண்ணம்மா.
"அத்தை " பவித்ராவின் குரலை கேட்டவள் "என்ன" என்றாள் எரிச்சலுடன்.
அவளின் கோபமான குரலில் ஒரு நிமிடம் தயங்கியவள், ஒருவாறு தைரியத்தை வரவழைத்து