" ஈசனே! விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு, சீதைக்கு ராமன் என்ன உறவுன்னு கேட்கிறீர்களே, என்னை பரிகசிக்கிறீர்களா?"
"சிவசிவா! தங்களை பரிகசிக்கிற அளவுக்கு எனக்கு இன்னும் துணிவு வரவில்லை, தேவி! சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று பூலோகத்து பெரியவங்களே சொல்லியிருக்காங்க! உடனடியாக நாம் செல்வதற்கு தங்கள் சம்மதம் பெறுவதே என் கேள்வியின் நோக்கம்!"
தேவி, ஈசனை அணைத்து உச்சி முகர்ந்துவிட்டு, " நான் ரெடி, நீங்க ரெடியா?" என்று சிரித்தாள்.
" தேவி! அவசரப்படாதே! கொஞ்சம் பொறு! நாம் உருவம் எடுத்து போவோமா? அருவமாகப் போவோமா?"
" உருவமாகப் போய் பார்த்தால்தான், நமக்கு நேரிடையான அனுபவம் கிடைக்கும். ஈசனே! முன்னொரு முறை அமுதம் கடைந்து எடுத்தபோது, விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்ததுபோல, நீங்கள் இப்போது பெண் வேடத்திலும் நான் ஆண் உருவிலும் போவோம்......"
" உனக்கு என்னை பெண்ணாகப் பார்க்க ஆசை! உன் ஆசைப்படியே நடக்கட்டும்! இன்னொரு விஷயம்! நாம் மனிதர்களாக அவதாரம் எடுப்பதால், பூமியில் நாம் தெய்வசக்தியை எதற்காகவும் பயன்படுத்தவேண்டாம்..."
" ஈசனே! எனக்கு இன்னொரு ஆசை! எனது தீவிர பக்தன், பாரதி பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த தமிழ்நாட்டில் முதலில் இறங்குவோம்......."
" தங்கள் இஷ்டம், தேவி!"
"தாங்களும்கூட, 'ஆதிசிவன் பெற்றெடுத்த தமிழ்' என்று என் பக்தன் பாரதி பாடிய தமிழ்நாட்டுக்கே விஜயம் செய்யுங்களேன்......"
" வேறு ஏதாவது நிபந்தனை உண்டா, தேவி?"
" ஆம், தமிழ்நாட்டில் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேண்டாம், ஈசனே!"
" ஏன், தேவி?"
" உங்கள் விசாரணையும் என் விசாரணையும் தனித்தே இருக்கட்டும், இருவரும் திரும்பியபிறகு, இங்கு கலந்தாலோசிப்போம்....."
" முற்றிலும் சரி! எத்தனை நாட்களில் திரும்புவோம், தேவி?"
" ஒரு மாதம் போதுமே, விசாரணைக்கு!"
" அவ்வளவு நாட்களா தேவைப்படும், தேவி?"
" சரி, இரண்டு வாரம் போதுமா?"
" நல்லது, தேவி!"
"கிளம்புவோமா?"
மறுவிநாடி, இருவரும் பூலோகத்தில், புதிய அவதாரம் எடுத்துவிட்டனர்.
அவதாரத்தின்போது என்ன நடந்தது என்பதை அடுத்துப் பார்ப்போம்
தொடரும்