தொடர்கதை - வாழ்வே மாயம்! - 02 - ரவை
சகாதேவனை வெளியேறவிடாமல் , மூவரும் அவர் கால்களை பிடித்துக்கொண்டு, கண்ணீர் வடித்தனர்!
"ஐயா! பதினெட்டு வருஷங்கள் முன்பு, என்னை மிரட்டிய, குரல்வளையை பிடித்து நெருக்கிய ஆபத்தைவிட, ஐயா! இன்று நாங்கள் மூவருமே பேராபத்தில் சிக்கித் தவிக்கிறோம்!
தாங்கள் சிறையிலிருந்து வெளிவந்த உங்களை, ஆண்டவன் எங்களை காப்பாற்ற அனுப்பிய தூதராகப் பார்க்கிறோம், ஐயா!
எங்களை காப்பாற்றுங்கள், ஐயா!"
சகாதேவன், பதறினார்!
" முதல்லே என் காலை விடுங்க, மூணுபேரும் எழுந்திருங்க! நான் போகலை, நம்புங்க!"
கண்ணீரை துடைத்துக்கொண்டு, மூவரும் எழுந்தனர்.
சகாதேவன் நாற்காலியில் தன் கைப்பையை வைத்துவிட்டு, தரையில் அமர்ந்தார்.
"ஐயா! ஏன் தரையிலே உட்காருகிறீங்க, நாற்காலியிலே உட்காருங்க! காயத்ரி! ஐயாவின் பையை வாங்கி, அவருடைய அறையிலே வை!"
"தரையிலே உட்காருவது, நல்லதும்மா! மண்ணுடன் நமக்கு நேரடி தொடர்பு இருப்பது, நம் உடலுக்கு நல்லது!
குழந்தைங்க, காயத்ரி, மாதவி இருவரும் தெரிந்து கொள்வதற்காக, சொல்கிறேன்!
நம் உடம்பு, கண்களுக்கு தெரிவதுபோல, ஒரு திடப் பொருளல்ல; பல லட்சம் செல்கள், தவிர எலும்பு, நரம்பு, ரத்தம், தோல் இப்படி பல எனர்ஜிகளின் சேர்க்கை!
அவைகளுக்கும் ஆதாரமாயிருப்பது, ஐம்பூதங்கள்! பஞ்ச பூதங்கள்! அதாவது, மண், காற்று, வெளி, நீர், நெருப்பு இவற்றின் சேர்க்கை! அதனாலே, தரையில் அமரும்போது, மண்ணின் தொடர்பு நமக்கு கூடுதல் சக்தியை தரும்!"
" ஐயா! இப்படியெல்லாம், நல்லது கெட்டது சொல்ல, குடும்பத் தலைவன் இல்லாம தவிக்கிற எங்களை கைவிட்டுடாதீங்கையா!"
" ஐயா! எங்க ரெண்டு பேருக்கும், 'அப்பா'ன்னு அழைக்கவோ, ஆதரவு தேடவோ, ஒருத்தர் இல்லையேன்னு ஏக்கமாயிருக்குய்யா! பாவம், அம்மா! தனியா போராடறாங்க, எதிரிகளை எதிர்த்து! அத்தனை பேரை அம்மா ஒருத்தியாலே எப்படி சமாளிக்க முடியும்? அதனாலே, ஐயா! நீங்க எங்களுடன் வாழ்ந்து, எங்களையும் வாழவைக்கணும்னு, மன்றாடி கேட்டுக்கிறோம், ஐயா!"
தன் முழங்காலை கட்டிக்கொண்டு அழுத இருவரையும், எழுப்பி, தன் அருகில் அமர்த்திக்கொண்டார், சகாதேவன்!