அங்கு அவர் ஜெனிட்டாவின் தாத்தாவை சந்தித்து அபியின் விஷயத்தை விளக்கி விட்டார். அவரிடம் அனைத்து விபரங்களை தெரிவித்து இருக்கிறார். அவர் பழைய ஓலை சுவடி குறிப்புகளை எடுத்து இதற்கான மருத்துவம் எதுவும் உள்ளதா என்று ஆராய்ச்சி செய்து இருக்கின்றார்கள். அதற்கு ஒரு பயனுள்ள குறிப்பும் கிடைத்ததாக சொன்னார். அது ஒரு மூலிகைத் தைலம் தயாரிக்கும் முறை போல.. அதற்காக அவர்கள் மூலிகைகளை மலை காட்டில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அது கிடைத்தவுடன் இங்கு வந்து விடுவதாகச் சொன்னார்"
"ஆனால் இவ்வளவு விவரத்தை எனக்கு ஏன் அவர் சொல்லவில்லை" என்று சற்று கவலையுடன் அதிதி கேட்டாள்.
" அது நீங்கள் அபியுடன் இருப்பீர்கள் அல்லவா அந்த நேரத்தில் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து இருப்பார். ஆனால் நீங்கள் அவருக்கு அழைப்பு விடுத்து பேசியிருக்கலாமே. நீங்கள் அதை ஏன் செய்யவில்லை"
" நான்… அவர் என்னை தவிர்க்கிறாரோ என்று நினைத்தேன்"
" அவர் உங்களை தவிர்க்கவில்லை. உங்களுக்காக ஒரு விஷயத்தில் கவனமாக இருக்கிறார். அது உங்களுடைய மகிழ்ச்சிக்காகதான் செய்கிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்."
" அப்படி என்றால் நான் அவருடன் தொலைபேசியில் பேசவா" என்றாள்.
" இதில் என்ன தயக்கம்?. நீங்கள் இப்போது அழைத்து சாதாரணமான விஷயங்களை விசாரியுங்கள். அவருடைய நலனை விசாரியுங்கள். மற்றபடி மருத்துவ சிகிச்சை முறைகளை நாம் பிறகு பேசிக் கொள்ளலாம்"
அவளுக்கு சந்தேகமும் குழப்பமும் இருந்தாலும் வினய் சொன்ன வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து அதிரதனுக்கு அழைப்பு விடுத்தாள். மறுமுனையில் அதிரதன் எடுக்கவும்,
"நான் அதிதி பேசுகிறேன்" என்றாள்.
" ஓ… அதிதி..நீ எப்படி இருக்கிறாய்?. அங்கே பிரச்சினை எதுவும் இல்லையே…" என்றான்.
" நல்லாதான் இருக்கிறேன். பிரச்சினை இருந்தால்தான் பேசணுமா.. நீங்கள் சென்ற வேலை என்னவானது என்று தெரிந்து கொள்ள நினைத்தேன்.