அவளுடைய மனதில் சிறு வயது நினைவுகள் மட்டுமே உள்ளது. க்ருபா அங்கிள் கூட அபிக்கு சிறு வயதிலேயே தெரிந்தவர்தான்.
அவளை அந்த காலகட்டத்தில் இருந்து வெளிக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பள்ளி பருவம் நேர்மையை விதைத்து இருக்கும். உலகமே நேர்மையாக இருக்கிறது என்று நினைத்திருப்போம். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைப்போம்… வளர வளரதான் நாம் நேர்மையாக இருப்பதே பெரிது என்று தோன்றும். அத்துடன் குடும்ப பொறுப்பு சேர்ந்து விடும். உலகத்தின் மாற்று நியதி புரிந்து… தவறு செய்பவர்களை 'போய் தொலை' எனறு தள்ளி விட்டு செல்லும் மனோபாவம் வரும். கூரிய வாளை மழுங்க வைக்கும் அனுபவங்கள்….!
அபிக்கு எதிக்ஸை எதிர்பார்க்கும் மனம் இருக்கிறது. அத்துடன் அதீதமான வலிமையும் இருக்கிறது. அதுதான் ஆபத்தானது. அவளை லகுவாக்க வேண்டும். அதிதிக்கு இது புரிந்தால் போதும்.
அவளால் அபியை சமாதானம் செய்ய முடியும். ஆனால் அமைதிபடுத்த முடியாது. ஏனெனில் அதிதியும் பாதிக்கப்பட்டவள்தான்.
அவளுடைய பார்வையை மாற்ற வேண்டும் எனில்… எப்படியாவது அபியின் கவனத்தைக் கவர்ந்து அவளுக்கான வாழ்க்கையில் அவனுடைய பங்களிப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் அவனுக்கு மனதளவில் அதிதி மீது ஒரு பரிவு... மென்மையான அன்பு... தோன்ற ஆரம்பித்து இருக்கிறது. அவளை சரி செய்து ஒரு எளிமையான வாழ்க்கை முறையை வாழ வைக்க வேண்டும். அதிலும் அந்தக் கவிதையில் இருந்த வலி மிகுந்த வரிகள் அவனை இதே முடிவை நோக்கி வலுவிக இழுக்க ஆரம்பித்தது.
மறுநாள் அதிரதன் ஜெனிட்டாவின் தாத்தாவுடன் அங்கு வந்து விட்டான். அவர்கள் வரும் பொழுதே மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பொருட்களையும் கொண்டு வந்திருந்தனர். அங்கு தயாராக அனைத்தும் இருந்ததால் அவர்கள் உடனடியாக குளியலுக்கு தேவையான மூலிகை நீரை தயாரிக்க ஆரம்பித்தனர்.