ரொம்பவும் அமைதியாக இருக்கும் அந்த வீடு."
"ஆமாம் அங்கு ஒரு பெரியவர் மட்டும்தான் இருக்கிறார். அவரும் அவ்வப்பொழுது ஊருக்குச் சென்று விடுவார். அதனால் உங்களுக்கு தெரியாது. இப்பொழுது அவருடைய மகள் குடும்பம் வந்திருப்பார்கள் போல. கொஞ்ச நாள் இங்கு தங்குவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்" என்று சொல்லிவிட்டு மேரி சமையல் அறைக்கு சென்றுவிட்டார்.
அவர் அமர்ந்திருந்த திசையிலேயே பக்கத்து வீடும் இருந்ததால் அவரால் அங்கிருந்து பார்வையை அகற்ற முடியாமல் போய்விட்டது. பக்கத்து வீட்டில் ஒரு இளம்பெண் துணி காயப்போடுவது தெரிந்தது. அந்த தாத்தாவின் பேத்தியாக இருக்கும்….
அந்த பெண் துணியை கொடியில் காயப்போட்டுக் கொண்டே இந்த பக்கம் திரும்பி பார்ப்பது தெரிந்தது. அவள் இங்கு எதை பார்க்கிறாள்..?.
மீண்டும் மீண்டும் அவளுடைய பார்வை இந்த வீட்டை பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தது அது ஷீலாவின் கவனத்தை கவர்ந்தது. அந்த பெண் எதை பார்க்கிறாள் என்று நொடியில் புரிந்து விட்டது. அலர்களுடைய வீட்டில் இருக்கும் மாமரத்தை பார்க்கிறாள். நிறைய காய் விட்டு தொங்கும் மரம் அவள் கவனத்தை கவர்ந்து விட்டதோ…
ம்ஹும்… இது வேறு பார்வை!... அவளுடைய வெளுத்த முகமும் கருவளையமிட ஆரம்பித்த கண்களும் அனுபவசாலியான அவருக்கு விஷயத்தை புரிய வைத்து விட்டன. மாங்காய்க்கு கருவுற்ற பெண்ணின் மனம் ஏங்குகிறது போல…
புன்சிரிப்பு மிளிற மேரியம்மாவை அழைத்தார்.
"சொல்லுங்கம்மா"
"மேரி… தொரட்டி எடுத்து போய் நம்ம மரத்துல இருந்து சாப்பிடற பதத்துல மாங்காய் பறிச்சிட்டு வர்றீங்களா…?.. இந்த கூடை நிறைய வேணும்.. மாங்காய்களை கழுவிட்டு வந்திடுங்க."
"யாருக்காவது தர போறீங்களாம்மா?. நான் உடனே பறிச்சிட்டு வர்றேன். பாப்பா இன்னும் சாப்பிடலை…"
"அதை நான் பார்த்துக்கறேன்" ஷீலா சொன்னார். மேரி மாங்காய் பறிக்க செல்லவும் ரேச்சல் அங்கு வந்தாள்.
"மா… நான் ரெடி.." அடர்ந்த சிவப்பு நிறத்தில் அவள் அணிந்திருந்த சுடிதார் அந்த குளிருக்கு பார்வையில் கதகதப்பை நிரப்பியது.
"முதல்ல இங்கு உட்கார்ந்து இட்லியை சாப்பிடு" என்று சொல்லிவிட்டு அவளுக்கும் பரிமாறினார்.