வீட்டில் இருக்கக் கூடாதாம்…
வாட் எ நான்சென்ஸ்… மீராவை நினைவுபடுத்தும் அவனைத்தான் முதலில் வெளியில் தூக்கி போட்டிருக்க வேண்டும்...
"சத்யா, சாப்பிடப் போகலாமா?" என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் ரஞ்சன் பிரவேசித்தான் பீரோவின் கதவை சாத்தியபடி,
" வா… வா… நான் உனக்காகதான் காத்திருக்கிறேன்" என்றான். இருவரும் ஹாலுக்கு வந்த பொழுது...
கூடத்தின் வாசலில் ஒரு பெண் தயங்கியபடி நின்றுகொண்டிருப்பதை பார்த்தார்கள்.
"என்ன விஷயம் நீங்கள் யாரை பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்று ரஞ்சன் கேட்டான்.
தயக்கத்துடன் நின்ற அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவனை ஸ்நேகமாக பார்த்து புன்னகைத்து…
" அண்ணா, நான் நந்து அவர்களை பார்க்க வந்திருக்கிறேன் "என்றாள்.
" நந்து… நந்தினிதானே சொல்கிறீர்கள்?. நந்துவை உஙகளுக்கு தெரியுமா "
" இல்லை நான் பக்கத்து வீடு. என்னுடைய பெயர் ரேச்சல்… அவர்கள் இப்பொழுது துணி காயப் போட்டுக் கொண்டிருந்த பொழுது யாரோ நந்து என்று அழைப்பதை கேட்டேன். அதனால்தான் அவர்கள் பெயரை சொன்னேன். நான் அவர்களைதான் பார்க்க வந்திருக்கிறேன்"
"அப்படியா... உள்ளே வாங்க. என்ன விஷயம்?"
"அம்மா இந்த கூடையை நந்துவிடம் தரச் சொன்னார்கள் "
"கிஃப்டா… நான் நந்தினியை கூப்பிடுகிறேன். நீங்கள் உங்கள் கையால் கொடுத்துவிடுங்கள்" என்று அவன் உள்ளே திரும்பி… " நந்து" என்று அழைத்தான்.
அங்கிருந்து அந்த நந்தினி வெளியே வந்தாள். ரேச்சலை பார்த்து விட்டு,
"யார் இவங்க?"
"இவங்க பக்கத்து வீட்டு ரேச்சல். உன்னிடம் எதையோ தரவேண்டும் என்று வந்திருக்கிறார்கள்" என்று சொல்ல,
ரேச்சல் அவளிடம் புன்னகைத்தவாறே அந்தக் கூடையை நீட்டினாள். அதை பார்த்ததும் "மாங்காயா.. இவ்வளவா?. எதற்கு தந்திருக்கிறார்கள் ?"என்றாள்.
" நான் தரவில்லை. அம்மா தந்து விட்டு வர சொன்னார்கள். பச்சரிசி மாங்கய்.. இனிப்பா… புளிப்பா இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு இது மிகவும் பிடிக்கும் என்று சொன்னார்கள்"
"புளிப்பு மாங்காய் மிகவும் பிடிக்கும் நேரமா? அது எந்த நேரம்?" என்று அருகிலிருந்த ரஞ்சனும் சத்யனும் குழம்பினார்கள்