"நாங்க கிராமத்து ரசனைல வைப்போம். நீங்க பெரிய பெரிய ஓட்டல்களில் சாப்பிட்டிருப்பீங்க"
"அங்கே வாசனைக்காக நிறைய விஷயங்களை சேர்ப்பார்கள். அதனால் சிக்கனோட இயல்பான மணமும் சுவையும் மாறிப்போய் விடும். வெறும் உருளை கிழங்கை சாப்பிடுவதுபோல இருக்கும்"
கல்பி சிரித்து வைத்தாள். அவனும் எதையோ பேச ஆரம்பித்தான்.. அவன் நினைத்தது போலவே ரேச்சல் கடுப்பாகி முகத்தை திருப்பி கொண்டாள். வாவ்… குட் ஷோ… !
இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்ற நினைத்து அவன் சிக்கன் சமைத்த கதையை கல்பியிடம் சொன்னான். நாட்டு கோழியில் அவன் செய்த க்ரில்ட் சிக்கனை பார்த்து கருங்கோழி டோஸ்டா என்று அனைவரும் கேட்டதை சொல்லவும் கல்பி சிரித்தாள்.
-கருங்கோழிங்கறது காட்டு பறவை. கோழிதான் என்றாலும் அதனுடைய சதைபகுதி சிவப்பாக இல்லாமல் கறுப்பாகவே இருக்கும்-
"கரி பிடிச்சு போயிடுச்சாக்கும்."
"சமையல்லாம் கை ராசியா இருந்தாதான் வரும்" அவன் பேசிக் கொண்டே இருந்தான்.
அப்போது மழை விடவும்,
" ஓகே.. நான் கிளம்பறேன்." என்று சொல்லி சத்யன் கிளம்பினான்.
அவன் செல்லவும்… கல்பியும் கிளம்ப… கடைசியாக ரேச்சல் கிளம்பினாள்.
ரொம்பவும் முக்கியத்துவம் இல்லாமல் போக வேண்டிய அந்த கணங்களை மறுநாள் மாரப்பன் வந்து கத்தி பேசி முக்கியத்துவம் பெற வைத்தான். என்னவாம்?..
அவன் அன்று பொழுது விடியும்போதே தாத்தாவிடம் பஞ்சாயத்து பேச வந்து விட்டான்.
"பெரியவரே… உங்க வீட்டுல என்ன நடக்குதுன்னு பார்க்க மாட்டீங்களா"
"என்ன மாரப்பா… காலைலேயே சத்தமா பேசுற?" வழக்கமாக அவன் இரவு நேரத்தில்தான் இரண்டு ஆளாக மாறி 'சவுண்டு' தருவான். அதுவும் இங்கே வர மாட்டான். மந்தையில் ரகளை விடுவான்.
"ஆங்… உன் பேரன்னு ஒருத்தன் வந்திருக்கானே அவன்ட்ட கேளு. என் கல்பிகிட்ட அவனுக்கு என்ன பேச்சு?"
"இரு… இன்னிக்கு என் பேரன் கிடைச்சானாக்கும்… அவனையே கூப்பிடறேன் நீயே கேட்டுக்கோ" என்றவர்… சத்யனை அழைத்தார்.
"என்ன விஷயம் தாத்தா?" என்று கேட்டுக்கொண்டே சத்யன் வந்தான். உடனே அவருடைய குரலை கேட்டு ரஞ்சன் அங்கு வந்துவிட்டான்.