"என்னது??? நித்து நீ வீட்டுக்கு சொல்லலையா?" ராம் கேட்க, "இ...இல்ல...." நித்யா தடுமாறினாள்.
"ஏன் சொல்லல?" மீண்டும் ராம் கேட்க, "எனக்கு அங்க இருக்க பிடிக்கல. அம்மா ரொம்ப ப்ரெஷர் கொடுத்தாங்க...அதான் சொல்லாம வந்துட்டேன்" அப்போதைக்கு ஒரு பொய்யை சொல்ல,
"என்னது மீனாட்சி உன்னை வற்புறுத்தினாளா??? அவ உன் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசமாட்டாளே!!!" விசாலத்தின் கூறிய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை குனிந்தாள் நித்யா.
"சரி பரவால்லை. இனியாவது இப்படி பண்ணாம இரு. எப்போ வீட்டுக்கு போறதா இருக்க?" விசாலம் கேட்கவும், "இல்லை பாட்டி. எனக்கு மண்டே கிளாஸ் ஸ்டார்ட் ஆகுது. சோ என்னால இனி லீவ்ல தான் போகமுடியும்" என்றாள் நித்யா.
"என்ன கிளாஸ்?" விசாலத்தின் கேள்விக்கு ராம் பதில் சொன்னான்.
"நம்ம நித்து இங்கயே ஒரு காலேஜ்ல ஜாயின் பண்ணிருக்கா பாட்டி. அது மட்டும் இல்ல, நம்ம கம்பெனிலேயே இன்டெர்ன்ஷிப் பண்ண போறா. அதான் இன்னைக்கு போயி புக்ஸ் அப்பறம் அவளுக்கு காலேஜ் போக வேண்டிய ஐட்டம்ஸ் எல்லாம் பர்ச்சேஸ் பண்ணிட்டு வந்தோம்" ராமின் இந்த பதிலை விசாலம் எதிர்பார்த்திருக்கவில்லை.
"பாட்டி எனக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு. நான் போயி ரெப்பிரேஷ் ஆயிட்டு வரேன்" அதற்க்கு மேல் இருந்தால் விசாலம் வேறு எதுவும் கேட்பார் என நித்யா அங்கிருந்து எழுந்து சென்றாள்.
"நானும் போயி ரெப்பிரேஷ் ஆயிட்டு வரேன் பாட்டி" என ராமும் எழுந்து செல்ல, "சரி பாட்டி நீங்க போயி குளிச்சிட்டு வாங்க. நான் ஜூஸ் போட்டு வைக்கறேன்" என தமிழ்செல்வி எழ, அவளின் கையை பிடித்து அமர்த்தினார் விசாலம்.
"செல்வி...உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது உன்னோட புத்திசாலித்தனமும் பொறுமையும். ஆனா சில சமயம் பெண்களுக்கு அந்த புத்திசாலித்தனம் அவங்க வேலைல இருக்கற அளவுக்கு அவங்களுடைய உறவுகளை பற்றிய புரிதல்ல இல்லாம போயிடும். அதே மாதிரி அளவுக்கு மீறின பொறுமையும் ஆபத்து. புரிஞ்சுக்குவேன்னு நெனைக்கிறேன்" என அவளின் தோளை தட்டியவர் எழுந்து அவரின் அறைக்கு செல்ல, அவர் சொல்வது புரிந்தும் புரியாமலும் இருந்தது தமிழ்செல்விக்கு.
விசாலத்திற்கு நித்யாவின் மனதில் இருப்பது என்ன என தெரிந்து கொள்ள முடியவில்லை.