சொல்லு." என்றவள் தோழி கொண்டு வரும் உணவை தான் பகிர்ந்துகொண்டதும், வேறு வழியில்லாமல் சுகன்யாவும் வாங்கி உண்டாள்.
சுகன்யாவைப் பொறுத்த வரைக்கும் எல்லா உணவுகளும் ஒன்றுதான். பலகாரமானாலும் சரி, பழைய சாதம் பச்சை மிளகாய் ஆனாலும் சரி ரசித்து உண்பாள். அவள் உண்பதைக் கண்டால் மற்றவர்களுக்கும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். உணவை வீணாக்குவது அவளுக்குப் பிடிக்காத ஒன்று.
ஆச்சர்யத்துடன் பார்க்கும் மகாலட்சுமியிடம்,
"உனக்குத் தெரியாது லட்சுமி. ஒருவேளை உணவைக் கூட ஒழுங்கா சாப்பிட முடியாது. கடைசியில் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பத்துமோ பத்தாதோன்னு பயந்துக்கிட்டே சாப்பிடுவோம். சில நாட்கள் எங்களுக்கும் கூட கிடைக்காது."
தோழி கூறியதைக் கேட்டு மகாலட்சுமி வருந்தியிருக்கிறாள். ஆனால் சுகன்யாவின் குரலில் வருத்தம் தெரியாது. எங்களைப் போன்றவர்கள் குடும்பத்தில் இதெல்லாம் சகஜம் என்பது போல் இருக்கும் அவள் குரல்.
மகாலட்சுமி பசியென்பதே என்னவென்று அறியாதவள். சாப்பிடுவதற்குக் கூட வழியில்லாமல் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவள் வருந்தினாள்.
இந்த நேரத்தில்தான் உடல்நிலை பாதிக்கப்பட்டு வடிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு வந்த காய்ச்சலைத் தாங்கும் அளவிற்கு உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இல்லாததால் அவனை காப்பாற்ற முடியவில்லை. அவன் குடும்பம் நிலைகுலைந்து போனது. ஏற்கனவே அவன் சம்பாதித்துக்கொண்டிருந்த நிலையிலேயே அவன் குடும்பம் வறுமையில் இருந்தது. இப்போது அவனும் இல்லை என்றால்?
வடிவேலுவின் இறுதிச் சடங்கிற்கான செலவை மகாலட்சுமியின் வீட்டினர் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வீட்டிற்கு வேறு ஓட்டுநர் வந்து சேர்ந்தான். ஆனால் வேறு ஒரு தோழி சுகன்யா மாதிரி கிடைப்பாளா?
மகள் வருத்தமாக இருப்பதைக் கண்ட அவள் பெற்றோர் என்னவென்று விசாரித்தனர். அவள் தன் கவலையை சொன்னாள்.
"வடிவேலு நம்மகிட்ட வேலை பார்த்தவன்டா செல்லம். அவன் குடும்பத்தை நாம அப்படியே விட்டுடுவோமா? உனக்கு இப்ப என்ன வேணும்? சுகன்யா உன்னோட எப்போதும் போலவே இருக்கனும். அதுதானே? அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்." என்று அவளை சமாதானப்படுத்தினார் ராமச்சந்திரன்.
மகளின் இளகிய மனதைக் கண்டு வளர்மதி மகிழ்ந்துபோனாள். தன்னுடைய வளர்ப்பு தவறவில்லை.