"டேய் கந்தசாமி. எப்படிடா இருக்கே?" என்றாள் கரகரவென்ற குரலில்.
"என்னம்மா. என்னோட அம்மா இப்படி அழலாமா?" மறுமுனையில் பேத்தியிடம் பேசிய கந்தசாமியும் கரைந்துபோனார்.
"நல்லா சாப்பிடறியாடா?"
"நல்லா சாப்பிடறேன்மா." என்றார் பேத்தியின் பாசத்தில் நெகிழ்ந்துபோனவராய்.
"இன்னும் கொஞ்ச நாள்தான்டா. உன்னைப் பார்க்க ஓடி வந்துடுவேன்."
"அதற்காகத்தான்மா காத்துக்கிட்டிருக்கேன்."
கந்தசாமி தனக்கு பேத்தி பிறந்த உடனே அவளைக் கண்ட போது என்னவோ தன் அன்னை மகாலட்சுமியே வந்து பிறந்துவிட்டதாக உணர்ந்தார். பிறந்ததில் இருந்து தன் தாயின் அன்பை உணராதவர் பேத்தியிடம் அதை அனுபவிக்க விரும்பினார். பேத்தி வளர வளர அவளை அம்மா அம்மா என்றுதான் அழைப்பார். சிறுவயதில் அவளும் அவரை வாடா போடா என்றழைக்க மகிழ்ந்துபோனார். அவளை அப்படியே அழைக்க ஊக்குவித்தார். வளர்மதி கூட அதைத் தடுக்க முயன்றாள். ஆனால் தந்தையின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்ட ராமச்சந்திரன் மனைவியை தடுத்துவிட்டார்.
மகாலட்சுமியும் தாத்தா மீது உயிரையே வைத்திருந்தாள். வீட்டினர் அனைவரிடமும் பேசிவிட்டு வைத்தவள் யோசனையானாள்.
அவளுடைய இளைய அண்ணி அவளுக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பதை வைத்து சீண்டினாள்.
"உன்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வச்சிட்டு எப்படி பிரிஞ்சு இருக்கப்போறோமேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தோம். இப்ப அந்தக் கவலை எல்லாம் போயிடுச்சு." என்று பேசிக்கொண்டிருக்கும்போதே வளர்மதி அவளை அழைக்கும் குரல் கேட்க அழைப்பைத் துண்டித்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
"வளரு. ஏன் கவலையா இருக்கே?" ராமச்சந்திரன் மனைவியின் அருகில் வந்து அமர்ந்தார்.
"எல்லாம் நம்ம லட்சுமியை நினைத்துதாங்க."
"அதுதான் இன்னும் சில நாளில் பரிட்சை முடிந்துடும். நம்ம பொண்ணு இங்கே வந்துடுவாளே. அவளை நினைத்து ஏன் கவலைப்படறே? எல்லாம் என்னால்தான்." என்றார் வருந்தியக் குரலில்.
"நீங்க என்ன பண்ணீங்க?"
"என்னோட ஜாதகத்தில் நானும் லட்சுமியும் ஒன்னா இருக்கக்கூடாதுன்னு இருந்தது. நான் ஊரை விட்டுப் போயிருக்கேன்னு சொன்னேன். ஆனால் நீதான் கேட்கலை. மகளை அனுப்பி வச்சிட்டு இப்ப கவலைப்பட்டுக்கிட்டு இருக்கே."