கவனித்துக்கொள்கிறாள். ஏற்கனவே தோழி மீது அன்பானவள்தான். இப்போது கூடுதல் பொறுப்பும் சேர்ந்துவிட்டதால் மிகவும் கவனமாக இருப்பாள்.
அவளை அவள் வீட்டினர் எப்படி கொண்டாடுவார்கள் என்பது அவள் அறிந்ததுதானே?
"ஏய் சுகன்யா. கொஞ்சம் வாயைக் கட்டேன்டி. வந்தப்ப எப்படி இருந்தே தெரியுமா? இப்ப ரொம்ப குண்டடிச்சிட்டேடி. இதுவே நம்ம லட்சுமியைப் பாரு. அவ வந்தப்ப ரொம்ப குண்டாயிருந்தாள். இப்பப் பாரு எப்படி மெலிஞ்சு போயிட்டான்னு." அருகில் அமர்ந்திருந்த மற்றொரு தோழி அவளை கிண்டல் செய்தாள்.
"ஐயய்யோ. நீ கண்ணு வச்சிட்டியா? சாந்தாம்மாக்கிட்ட சொல்லி திருஷ்டி சுத்திப்போட சொல்லனும்." என்று அவளிடம் கூறிவிட்டு மீண்டும் நொட்டைவிட்டுக்கொண்டு சாப்பிடுவதைத் தொடர்ந்த அவளைக் கண்டு சிரித்தாள் லட்சுமி.
உண்ட உடன் அறைக்குத் திரும்பினர். சுகன்யா அவளோடு ஒரே அறையில்தான் தங்கியிருக்கிறாள். மகாலட்சுமியைப் பற்றி அவள் அறியாதது ஒன்றும் இல்லை. மகாலட்சுமி அவளிடம் ஒன்றே ஒன்றைத்தான் மறைத்திருக்கிறாள். அதுவும் அவள் வாழ்க்கையில் சுகன்யாவிற்கு முன்பு வந்த அவனைப் பற்றித்தான். அவனைப் பற்றி நினைக்கவே பிடிக்காத அவளுக்கு அவனைப் பற்றி தோழியிடம் பகிர்ந்து கொள்ள எதுவும் இல்லை என்றே தோன்றியது.
அவர்கள் தங்கியிருக்கும் அறை மிகவும் பெரியது. இரண்டு கட்டில்கள் போட்டு கூட இடம் தாராளமாய் இருந்தது. வெளியில் பால்கனி வேறு. காற்று வாங்கிக் கொண்டு பேசுவதற்கு வாகாக அங்கே ஒரு ஊஞ்சலும் கட்டப்பட்டிருந்தது.
இன்று பூரியும், மசாலாவும் உண்டதில் களையாக இருந்தது. இருவருமே படுத்துவிட்டனர்.
சிறிது நேரத்திலேயே சுகன்யா உறங்க ஆரம்பித்துவிட்டாள்.
மகாலட்சுமிக்கு உறக்கம் வரவில்லை. கைப்பேசியை எடுத்தவள் தன் தாத்தாவின் எண்ணுக்கு அழைத்தாள்.
இந்த நேரத்தில் வீட்டினர் அனைவரும் ஒன்றாக இருப்பார்கள் என்று அவளுக்குத் தெரியும். அதுவும் ஞாயிறன்று சித்தப்பாக்கள் குடும்பமும் அவர்கள் வீட்டிற்கு வந்துவிடுவர். அவள் அம்மா வளர்மதியும், சித்திகளும் சேர்ந்து சமைப்பர். அன்றைய தினம் கலகலப்பாக போகும். அவள் இங்கு வந்ததில் இருந்தே இந்த நாளை நினைத்துத்தான் வருந்துவாள். இந்த நேரத்தில் அவர்களோடு இருக்க முடியவில்லை என்றாலும், அவர்களுடன் பேசலாமே என்று ஞாயிறன்று மறக்காமல் அழைத்துவிடுவாள். வீட்டுப் பெரியவர் கந்தசாமியின் எண்ணிற்குத்தான் அழைப்பாள்.
"லட்சுமிம்மா. எப்படியிருக்கீங்கம்மா."
கந்தசாமியின் குரலைக் கேட்டதுமே அவள் கரைந்துபோனாள்.