"நீ ஏன்டி அவகிட்ட வம்புக்குப் போறே?" என்றாள் மகாலட்சுமி.
"அவ என்கிட்ட வம்புக்கு வந்தால் பரவாயில்லை. உன்கிட்டயில்லே வர்றா. சும்மா விடுவேனா?"
"அவ வம்புக்கு வந்தால் வந்துட்டுப் போறாள். நீயும் பதிலுக்கு பேசனுமா?"
"இல்ல லட்சுமிம்மா. என்னவோ அவ பரம்பரைப் பணக்காரி மாதிரி உன்னை ரொம்ப மட்டமா பேசறா. உன்னோட குடும்பத்தை பத்தி அவளுக்குத் தெரியுமா?"
"அதை தெரிஞ்சுக்கிட்டு அவ என்ன பண்ணப்போறாள்?"
"உன்னை கூட ஒருத்திக்குப் பிடிக்காமல் போகுமா? எனக்கு அந்த வீணாவுக்கு ஏதோ குறையிருக்கோன்னு தோணுது."
"என்னை எல்லாருக்கும் பிடிக்கனும்னு அவசியம் இல்லை சுகன்யா."
"இல்லை. கண்டிப்பா உன்னைப் பார்க்கிற யாரும் உன்னை வெறுக்க முடியாது." திட்டவட்டமாக அடித்துக்கூறினாள்.
"சரி சரி. கிளம்பு. நேரமாச்சு."
அவர்கள் சொல்லியிருந்த கார் வரவும் கிளம்பினார்கள்.
மகாலட்சுமி அமைதியாக வந்தாள்.
"உன்னைக் கூட யாருக்கும் பிடிக்காமல் போகுமா?" என்ற சுகன்யாவின் குரல் அவள் காதில் ஒலித்தது.
'ஒருத்தன் இருக்கிறானே. பார்க்கும்போதெல்லாம் வெறுப்பைக் காட்டிக் கொண்டு, என்னை வருத்திக் கொண்டு. உனக்குத் தெரியாது சுகன்யா. தெரிந்தால் நீ அவனிடம் சண்டையிடலாம். அதனால்தான் உன்னிடம் கூட கூறாமல் இருக்கிறேன்.' மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டாள்.
அவர்கள் கையோடு ஒரு பந்தை கொண்டு சென்றார்கள். கடற்கரை மண்ணில் கால் வைத்ததுமே அந்த வளர்ந்த குழந்தைகள் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். யாரும் பார்க்கிறார்களா? என்ற கவலை அவர்களுக்கு சிறிதும் இல்லை. கடற்கரை அனைவரையுமே குழந்தையாக்கிவிடுகிறது.
மகாலட்சுமி தன்னை நோக்கிப் பறந்து வரும் பந்தை தவற விடாமல் இருப்பதற்காக பின்னோக்கி ஓடி இறுதியில் பிடித்தேவிட்டாள். ஆனால் யார் மீதோ இடித்துக்கொண்டவள் கால் தவறி விழப்போனாள். இரு கரங்கள் அவளைப் பிடித்துக்கொண்டன.
"எல்லாம் திமிர். பணம் இருக்கிற திமிர்." அந்தக் குரலில் விலுக்கென்று நிமிர்ந்தாள்.
அங்கே அவளைத் துளைக்கும் பார்வையோடு அவன். அவனைக் கண்டதும் கை தானாக அவள் தலைக்குப் போய் தடவியது. அவனும் அவளுடைய செயலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
'இருந்திருந்து இவன் மீதா மோதினேன்?' தன்னையே நொந்துகொண்டாள்.