வரவும் சுகன்யா திரும்பிப்பார்த்தாள். அருகில் இருந்த கட்டிலில் உறங்காமல் எதையோ படித்துக் கொண்டிருந்த மகாலட்சுமி கண்ணில் பட்டாள்.
"என்ன லட்சுமி தனக்குத்தானே சிரிச்சுக்கிறே. என்னிடமும் சொன்னால் நானும் சிரிப்பேன்ல."
"நான் ஒன்னும் சும்மா சிரிக்கலை. கதையைப் படிச்சுட்டுதான் சிரிக்கிறேன். இதெல்லாம் சொன்னால் புரியாது. நீயே படிச்சு தெரிஞ்சுக்கோ."
"அம்மாடியோ. இத்தனை பெரிய புத்தகமா? என்னால் முடியாதும்மா."
மீண்டும் மகாலட்சுமி புத்தகத்தில் மூழ்கினாள். அவளுக்குப் பிடித்த எழுத்தாளரின் கதை அது. மகாலட்சுமி வாசிப்பதை மிகவும் நேசிப்பவள்.
எந்த பாரபட்சமும் இல்லாது எல்லாவகையான புத்தகங்களையும் வாசிப்பாள். இந்த வீட்டில் ஒரு நூலகமே வைத்திருக்கிறாள்.
சென்னைக்கு அவள் வரும்போது முதலில் அவளை விடுதியில்தான் சேர்க்க வேண்டும் என்று வளர்மதி கூறியிருந்தாள். ஆனால் இந்த விசயத்தில் யாரும் அவளுடன் ஒத்துப்போகவில்லை.
ராமச்சந்திரன் தன்னுடைய நண்பன் ஒருவன் வீடு இருப்பதாகக் கூறி அங்கேயே தங்க ஏற்பாடும் செய்தார். அவள் வாடகை வீட்டில்தான் தங்கியிருப்பதாக எண்ணியிருந்தாள். ஆனால் கந்தசாமி அந்த வீட்டை பேத்தியின் பெயரில் வாங்கச் சொல்லி அதை மறுக்க முடியாமல் ராமச்சந்திரனும் அப்படியே செய்துவிட்டார். மகாலட்சுமி தன்னுடன் பயிலும் சில தோழிகள் தன்னுடன் தங்குவதாகக் கூறி அனுமதி கேட்டபோதுதான் அவளுக்கு அது அவளுடைய வீடு என்று தெரிந்தது.
"அது உன்னோட வீடும்மா லட்சுமி. உன்னோட விருப்பம்தான் எங்களுக்கு முக்கியம்" என்றுவிட்டார் அவள் தந்தை.
இப்போதும் சுகன்யாவிற்கு மட்டும்தான் இது அவளுடைய வீடு என்பது தெரியும். அவள் மற்றவர்களிடம் அதைப் பகிர்ந்து கொள்ளவில்லை.
மதிய உணவிற்குப் பிறகு உறங்காமல் தோழிகள் பேசிக் கொண்டிருந்தனர். அன்றைய தினம் மாலை கடற்கரைக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததால் மதிய உணவிற்குப் பிறகு யாரும் உறங்குவதற்கு செல்லவில்லை.
"நேத்து அந்த வீணாவுக்கு நீ சரியான பதிலடி கொடுத்தே சுகன்யா." என்று ஒருத்தி அவளைப் பாராட்டினாள்.
"ஆமாம் சுகன்யா. அவளுக்குப் பணம் இருக்குங்கிற திமிர். அதான் அப்படி நடந்துக்கிறா."
"அவகிட்ட பணம் இருந்தால் அது அவளோட. அதை நம்மக்கிட்ட காட்டனும்னு என்ன அவசியம்?"
மற்றவர்கள் கிளம்புவதற்காக தங்கள் அறைக்குச் சென்றுவிட அவளும், சுகன்யாவும் ஆயத்தமானார்கள்.