‘மகாவாமே.என்ன ஒரு குழைவு அவன் குரலில். அப்படியே ஒரு காதலன் தன் காதலியிடம் உருகிப்பேசுவது போல் என்னமாய் நடித்தான். அப்படி நடிக்க வேண்டிய அவசியம் என்ன?’
அவன் உண்மையிலேயே தன்னிடம் பேசினால் எப்படி இருக்கும்?
நினைக்கும்போதே அவளுக்கு சிரிப்பு வந்தது.
அவன் தன்னருகே வந்து நாற்காலியின் இருபக்கமும் கை வைத்தவாறு குனிந்து நின்றானே அந்த தோற்றமே கண் முன்னே வந்தது.
எத்தனை உயரமாக இருக்கிறான். அத்துடன் அவன் உடம்பும் அவன் மனதைப் போல் இரும்புதான் என்று தோன்றியது. அந்த சில நிமிடங்கள் பார்த்த அவன் தோற்றம் கூட தன் மனதில் இத்தனை தூரம் பதிந்துபோயிருக்கிறதா? என்ற ஆச்சர்யம் அவள் மனதில்.
அவளுடைய சகோதரர்கள் பெரும்பாலும் அமர்ந்த இடத்தில் இருந்தே வேலை பார்ப்பவர்கள். அதனால் சிறிதாவது தொப்பை இருக்கும். இவனை மாதிரி இருக்க மாட்டார்கள்.
மாப்பிள்ளை வீட்டில் இருந்து மணப்பெண்ணிற்குப் புடவை எடுக்க அழைப்பு வந்தது.
“லட்சுமி. புடவை எடுக்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து கூப்பிடறாங்க.”
தாயின் குரல் கேட்டும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை.
“லட்சுமி உன்கிட்டதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.”
“காதில் விழுது.”
“காதில் விழுந்தும் எதுவும் சொல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம்?”
“அதுக்கென்ன இப்ப?”
“நீயும் புடவை எடுக்க வரனும். இல்லைன்னா மாப்பிள்ளை வீட்டில் ஏதாவது நினைச்சுப்பாங்க.”
“யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லை. நான் வரலை. மாப்பிள்ளையே நீங்க பார்த்தவர்தானே? அவரை நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லலையா? இப்ப நீங்க செலக்ட் பண்ற புடவையை கட்டாமலா இருக்கப்போறேன். உங்க இஷ்டத்துக்கு என்ன வேணுமோ எடுத்துட்டு வாங்க.”
அதற்கு மேல் மகளிடம் வாதம் செய்து கொண்டிருக்காமல் வளர்மதி சென்றுவிட்டாள். போவதற்கு முன்பு மகளைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள். அது தெரிந்தும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் மகாலட்சுமி.
அவளிடம் அதிகம் கண்டிப்பைக் காட்டிவிட்டோமோ என்று கவலைகொண்டாள் வளர்மதி. எப்படியோ மகள் நல்லவிதமாக வாழவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.
மகள் தன் முட்டாள்தனத்தால் மாப்பிள்ளையை கோபப்படுத்திவிடுவாளோ? என்ற கவலையும் அவளுக்கு இருந்தது.