புரிந்துகொள்வான் என்று அவள் நம்பினாள்.
அப்போது அவள் அலைபேசி ஒலியெழுப்பியது. தன் வீட்டினர்தான் புடவை எப்படி வேண்டும் என்று கேட்பதற்காக அழைக்கிறார்கள் என்று அவள் எடுக்காமல் விட்டாள். அவள் மூத்த அண்ணி அப்படி சொல்லிவிட்டுத்தான் சென்றாள்.
மாப்பிள்ளை வீட்டாரோடு சேர்ந்து அவளுக்குப் புடவை எடுத்த கையோடு வீட்டில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் புத்தாடைகள் எடுத்து வந்துவிடலாம் என்று குடும்பத்துடன் சென்றிருந்தனர்.
“லட்சுமி. போனை எடு.”
“ப்ச். அது அடிச்சுக்கிட்டிருக்கட்டும்.” என்று அசட்டையாக கூறும் தோழியைப் புரியாமல் பார்த்தாள்.
“ஏதோ புது நம்பர்ல இருந்து போன் வருது.”
கூறிக்கொண்டே அலைபேசியின் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவள் பேசிய உடனே முகம் மலர்ந்தாள்.
“அண்ணா. இருங்கண்ணா. நான் சுகன்யா பேசறேன். இதோ லட்சுமிக்கிட்ட கொடுக்கிறேன்.” என்றவள் முகமலர்ச்சியுடன் அவளிடம் நீட்டினாள்.
அவளிடம் கொடுத்த கையோடு நாசூக்காக வெளியேறினாள்.
அப்படி யாரிடம் அவள் முகம் மலரப் பேசினாள் என்ற சந்தேகத்துடன் அலைபேசியை காதில் வைத்தாள்.
“ஏன் புடவை எடுக்க வரலை?”
எடுத்த உடனே அவன் கோபமான குரல்தான் கேட்டது. இனி அடிக்கடி இந்த மாதிரி கோப வார்த்தைகளை கேட்க வேண்டியிருக்கும். அதற்கு தன்னைப் பழக்கிக் கொள்ளவேண்டியிருக்கும் என்ற நிதர்சனம் அவளுக்குப் புரிந்தது.
“அதான் வீட்டில் வந்தாங்களே.” என்றாள்.
“நான் கேட்டது உன்னை ஏன் வரலைன்னு.”
அவள் பதில் சொல்லவில்லை.
“அத்தைக்கு ஏதாவது தெரியுமா? நீங்க எடுத்தால் சரின்னு நீ சொன்னேன்னு ஏதோ சொல்லி சமாளித்தாங்க. நீ அப்படி சொல்லியிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். இதப்பாரு. நான்தான் உன்னை வேண்டாம்னு சொல்லனும். நீ சொல்லக்கூடாது.”
“இங்க யாரும் எதுவும் சொல்லலை.” முணுமுணுத்தாள்.
“என்ன சொன்னே?”
“ஒன்னும் சொல்லலை.”
“அப்படித்தான் இருக்கனும். கல்யாணம் முடிகிற வரைக்கும் பேசாமல் இருக்கனும். அதன் பிறகு