அவளுக்குப் புரியவில்லை. நல்லவேளை. அவளை தனிமையில் விட்டுவிட்டு மற்றவர்கள் சென்றுவிட்டனர். சுகன்யாவும் வேலையிருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.
திருமண நாளும் வந்தது.
குலதெய்வம் கோயிலில் பேத்தியின் திருமணத்தை வைக்க வேண்டும் என்ற பெரியவர்கள் கேட்டதற்கு மாப்பிள்ளை வீட்டார் எந்த மறுப்பும் கூறவில்லை.
குலதெய்வம் கோயிலில் முக்கிய உறவினர்கள் மட்டும் சூழ்ந்திருக்க மாதவன், மகாலட்சுமி திருமணம் நல்ல முறையில் நடந்தது.
பெரியவர்கள் கண்கள் கலங்க பேத்தியின் திருமணத்தை மனநிறைவோடு கண்டு களித்தனர். வளர்மதிக்கும் மகள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக புகுந்த வீட்டிற்குச் செல்லப்போகிறாள் என்ற மகிழ்ச்சி.
மணமக்கள் அக்னியை சுற்றி வரும்போது அவள் கையைப் பற்றியவன் இறுக்கமாகப் பற்றியிருந்தான். நேரம் ஆக ஆக அவன் பிடி இறுகியதை அவளால் உணர முடிந்தது.
“மணவறை வரைக்கும் வந்துட்டேன். எங்கே ஓடிப்போகப்போறேன்னு இப்படி பிடிச்சிருக்கே? வலிக்குது விடுடா.” சமயம் கிடைத்தபோது அவனிடம் முணுமுணுத்துவிட்டாள். அதன் பிறகுதான் அவள் தவறு புரிந்தது.
அவனைப் பற்றி நினைத்தபோதெல்லாம் அவனை ஒருமையில் ஏகவசனத்திலேயே தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தவளுக்கு இன்று வெளியில் வந்துவிட்டது.
ஒருகணம் அவனிடம் எந்த அசைவும் அவள் உணரவில்லை. முன்பை விட இறுக்கம் அதிகமானது. ஏன்டா சொன்னோம் என்றாகிவிட்டது அவளுக்கு. அவனிடம் தான் மறுப்பைக் கூறினால் அவன் அதை ஏற்க மாட்டான். அதற்கு எதிர்மாறாக தான் செய்வான் என்று உணர்ந்துகொண்டாள்.
அதன் பிறகு எத்தனை வலித்தும் அவனிடம் அவள் வாயைத் திறக்கவில்லை.
திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் வரவேற்பு. ஊரின் முக்கியஸ்தர் குடும்பம். அதுவும் அவர்கள் வீட்டு இளவரசியின் திருமணம். கூட்டம் அலைமோதியது.
ஒருவழியாக திருமணம் முடிந்து மணமக்கள் மணமகளின் வீட்டிற்கு வந்தனர்.
அன்றே அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க ஜோதிடர் நேரம் குறித்து கொடுத்திருந்தார்.
நேற்று வரை தனது அறையாக மட்டும் இருந்த அறைக்கு செல்வதற்கே அவள் தயங்கி நின்றிருந்தாள்.
“லட்சுமி. அண்ணன் எத்தனை நேரமா காத்துக்கிட்டிருக்கார். அவரை ரொம்ப சோதிக்காமல் போ.” என்று அவள் மூத்த அண்ணி அவளை உள்ளே தள்ளிவிட்டாள்.
அவனிடம் மறுப்பைக் காட்டினால் அவன் அவள் மறுப்பை ஏற்றுக்கொள்ளமாட்டான்.