“ஹாய். எப்படியிருக்கே லட்சுமிம்மா?”
உள்ளே நுழைந்த சுகன்யாவை கோபமுடன் பார்த்தாள் மகாலட்சுமி.
“ஏய். என்னடா கோபமா?”
என்று அவள் முகத்தைப் பிடித்துக் கெஞ்சினாள்.
“பின்னே. உன் மேல் கோபப்படாமல் உன்னை கொஞ்சவா முடியும்?”
“என்னடோ கோபம்?”
”என்னன்னு உனக்குத் தெரியாதா?”
“தெரியாமல்தானே கேட்கிறேன்.”
“நீ என்னைப் பார்த்து எத்தனை நாளாச்சு?”
“ஓ. அதுதான் கோபமா?”
அவள் அமைதியாக இருந்தாள். அவளுக்கு மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளக்கூட ஆளில்லாமல் எத்தனை தவித்துவிட்டாள்.
“உனக்கு என்ன பிரச்சினைடா? உன் கல்யாணம் முடிகிற வரைக்கும் நீ ஹோட்டலுக்கு வரவேண்டாம்னு அம்மா சொல்லிட்டாங்க. அதனால் எனக்கு கொஞ்சம் வேலை அதிகம். அத்தோட அம்மணி நீங்க அண்ணனைப் பத்தின கனவோட இருப்பீங்க? நான் வந்தா தொந்தரவா இருக்கும்னுதான்.”
“சும்மா சாக்குபோக்கு சொல்லாதே. என் மனதில் உள்ளதை சொல்லக்கூட ஆள் இல்லாமல் எத்தனை தவிச்சுட்டேன்.”
அவள் கண்கள் தன்னையறியாமல் கலங்கிவிட்டது.
“ஏய் லட்சுமிம்மா. ஏன்டா அழறே? என்னாச்சு உனக்கு?”
“நீயும் எங்க வீட்டில் உள்ளவங்க மாதிரி என்னை விரட்டத்தானே நினைக்கிறே?”
சுகன்யா சிரித்துவிட்டாள்.
அவள் பிறந்த வீட்டை விட்டுப் போகப் போவதை நினைத்துத்தான் கவலைகொள்கிறாள் என்று நினைத்துக்கொண்டாள்.
ஏனோ மகாலட்சுமிக்கு மாதவனைப் பற்றி அவளிடம் தவறாக கூற மனம் வரவில்லை. அவளுக்கே அவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று தெரியவில்லை எனும்போது அவள் என்னவென்று சொல்வாள்? அத்துடன் அவன் அவள் கணவனாகப் போகிறவன். அவனைப் பற்றி தோழி தவறாக எண்ணிவிடக்கூடாது என்ற எண்ணமும் இருந்தது.
ஒருவேளை தான் அவனை தவறாக எண்ணியிருந்தது போல் அவனும் தன்னைப் பற்றிய தவறான எண்ணத்துடன் இருக்கலாம். தான் அவனைப் புரிந்துகொண்டது போல் அவனும் தன்னைப்