பேத்தியும், மனைவியும் பேசிக்கொள்வதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் கந்தசாமி.
“நாங்க ஏன்டா அப்படி சண்டை போட்டுக்கனும்? உன் அம்மா ரொம்ப நல்லவ. நாங்க எப்படி எதிர்பார்த்தோமோ அப்படியே இருக்கிறா. அத்தோட நம்ம குடும்பத்து குலசாமியா உன்னைப் பெத்துக் கொடுத்திருக்கிறா. அதுக்கப்புறம் அவமேல் எப்படி கோபப்பட முடியும்?”
“நீ உன் மருமகளை விட்டுக்கொடுக்க மாட்டியே.” செல்லமாய் அலுத்துக்கொண்ட மகாலட்சுமி தன் தாத்தாவை கட்டாயப்படுத்தி உணவுண்ண வைத்துவிட்டு மாத்திரையும் கொடுத்துவிட்டுத்தான் அறையை விட்டுச்சென்றாள்.
“என்னடா வேலைக்குப் போகலையா?” என்று அவர்கள் கேட்கும்போது வளர்மதி
“கல்யாணம் வரைக்கும் வீட்டில் ஓய்வெடுக்கனுமாம் மாமா உங்க பேத்திக்கு. நான் அவளை சீக்கிரம் வீட்டை விட்டு விரட்ட நினைக்கிறேனாம். அதனால் உங்க கூட எல்லாம் இருக்க நேரம் போதலையாம். அதான் இப்ப வேலைக்குப் போகலைன்னு சொல்லிட்டா.” மகளை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே மாமனாரிடம் பேசினாள் வளர்மதி.
மகாலட்சுமி எதையும் மறுத்துக்கூறவில்லை. வெளியில் போக வேண்டாம் என்று சொல்வதையும் சொல்லிவிட்டு இப்போது பழியைத் தன்மேல் தூக்கிப் போடும் அன்னையை முறைத்துப் பார்த்தாள் மகாலட்சுமி.
அவள் தன்னை நம்பவில்லையே என்ற கோபம் அவளுக்கு.
வளர்மதி கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டு தன்னை பெருமையாகப் பார்க்கும் பெரியவர்களை வருத்த அவள் விரும்பவில்லை. அவள் அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கிறாள்தான். அதனால் தன்னுடைய திருமணம் தன் வீட்டினரிடமிருந்து தன்னைப் பிரித்துவிடக்கூடாது என்று தாயின் அறிவுரையைக் கேட்டு மனதை அலைபாயவிடாமல் இருந்தாள்.
இப்போதும் வீட்டினருக்காகத்தான் அவள் மாதவனை மணந்து கொள்ள சம்மதித்திருக்கிறாள். அப்படிப்பட்டவளை சந்தேகப்பட்டுவிட்டாளே என்று கோபம் அவளுக்கு.
ஆனால் பெரியவர்களோ அதற்கு நேர்மாறாக மருமகள் மீது நன்றியுணர்ச்சியுடன் இருந்தனர்.
வீட்டிற்கு மூத்த மருமகளாய் வந்தவள் குடும்பத்தை அரவணைத்துச் சென்றாள்.
மகாலட்சுமி பிறந்தபோது குடும்பமே அவளைக் கொண்டாடியது. ஆனால் அவள் எப்போதும் போல் அடக்கமாகத்தான் இருந்தாள்.
மகாலட்சுமிக்கு அவர்கள் அதிக செல்லம் கொடுத்த போது அவள் மட்டும் கண்டிப்பை காட்டவும் பெரியவர்கள் முதலில் அவளிடம் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
“இல்ல மாமா. குழந்தைக்கு நாம கொடுக்கிற செல்லம் அவளை நாளைக்கு தடம் மாற வச்சுடுச்சுன்னா. நீங்க உங்க மகிழ்ச்சிக்காக அவளுக்கு செல்லம் கொடுக்கறீங்க. நாளைக்கு அவள்