நல்லாருக்கனும். அதிக செல்லம் அவளைக் கெடுத்துடக் கூடாது. அதனால் நான் ஒருத்தியாவது கண்டிப்பா நடந்துக்கிறேன். அப்பதான் அவ நம்ம கையை மீறிப்போக மாட்டாள்.”
மருமகள் தெளிவுடன் பேசவும் பெரியவர்கள் ஒத்துக்கொண்டனர்.
அதனால்தான் இன்று பேத்தி அவர்கள் கைகாட்டும் மாப்பிள்ளையை மணந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறாள்.
மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தாள். அவள் மனம் இன்னும் குழப்பத்திலேயே தான் இருந்தது. அவளுக்குத் திருமணத்தை மறுக்கும் எண்ணம் இல்லை. தன் வீட்டினர் முனைப்புடன் திருமண வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அத்துடன் மாதவனின் மாமா ராஜசேகரும் மாதவனைப் பற்றி பேசியதில் இருந்து அவள் அவனை மறுக்கும் எண்ணத்தை விட்டிருந்தாள். திருமணத்திற்குப் பிறகு தன்னை அவனுக்குப் புரிய வைக்க முடியும் என்று நம்பினாள்.
ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை. ஆதாரமே இல்லாமல் அவன் தன் மேல் கொண்டிருக்கும் தவறான அபிமானத்திற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
இப்போது தேவையில்லாமல் அதைப் பற்றி யோசிக்க வேண்டாம். அவனே தன் வாயால் அவளிடம் சொல்வான். அப்போது தன் மேல் அவன் வைத்திருக்கும் தவறான எண்ணத்தை மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் பேசாமல் வளைய வந்தாள்.
பெரியவர்கள் அவள் உடல் மெலிந்திருப்பதைக் கண்டு வருத்தப்படவும் அவள் மீண்டும் தன் உடல் எடையை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள். திருமண நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது.
மாப்பிள்ளை வீட்டில் இருந்து ராஜசேகர் வந்ததோடு சரி. வேறு யாரும் வரவில்லை. அதன் பிறகு மாதவனும் வீட்டிற்கு வரவில்லை. கந்தசாமிக்கு சிகிச்சை முடிந்துவிட்டது. அவர் நன்றாக நடக்க ஆரம்பித்துவிட்டார்.
அதனால் அவன் வருகைக்கு அவசியம் இல்லாமல் போயிற்று. அவளுக்கும் சற்று நிம்மதியாக இருந்தது. இல்லை என்றால் அவன் வரும்போது அவனிடம் வீட்டார் முன்பு எப்படி நடந்துகொண்டிருப்போமோ என்ற சந்தேகம் அவள் மனதில். அத்துடன் அவன் எப்படி நடந்துகொள்வானோ? என்ற சந்தேகமும் தான். அவன் தன்னிடம் நடந்துகொள்ளும் விதம் பார்த்து வீட்டினர் வருத்தப்படலாம்.
அவர்கள் இருவரும் தனியாக இருக்கும்போது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்.
ஆனால் அவன் மற்றவர்கள் முன்பு அவளிடம் வெறுப்பைக் காட்டிவிடமாட்டான் என்றும் தோன்றியது. அன்று அவனுடைய மருத்துவமனைக்குச் சென்றபோது அந்த வரவேற்புப்பெண்ணுக்கு நேராக அவன் அவளிடம் எப்படிப் பேசினான் என்று நினைத்துப் பார்த்தாள்.