இருக்கத்தான் செய்தது.
15 நாட்கள் ஓடி முடிந்தது. வழக்கம்போல பள்ளிக்கு தயார் ஆனாள். அவள் மனது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் காரணம் தான் அவளுக்கு புரியவில்லை.
அவளைப் பார்த்ததும் ராகவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்னும் ஒரு இரண்டு மாதங்கள் தான் அதன்பிறகு ராகவ்வின் பள்ளிப்படிப்பு முடிந்து விடும். அவன் எஞ்சினியரிங் காலேஜில் சேர்வதற்காக அவரது தந்தை அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டார்.
நான்கு ஆண்டுகள் வெளிநாட்டில் படிப்பதற்காக எல்லா ஆயத்தங்களும் தயாராகி கொண்டிருந்தது. இந்த பதினைந்து நாள் பிரிந்திருந்த இந்த இடைவெளி தான் தன்னால் அவளை விட்டு அவ்வளவு தூரம் சென்று படிக்க முடியுமா என்ற எண்ணத்தை ராகவ்விற்கு கொண்டு வந்தது. இதற்கு பெயர் தான் காதலா என்று எண்ணி குழம்பி போனான். இல்லை ...இல்லை ...இது வயது கோளாறு. அவள் எனக்கு தோழி மாத்திரமே. அதற்காக நான் என் படிப்பை விட்டு விட முடியுமா... என் எதிர் காலத்தை வீணடிக்க முடியுமா... என்று பல கேள்விகளை கேட்டு தன்னை சமாதானம் செய்துகொண்டான்.
குழலிக்கும் அவனைப் பார்த்ததுமே மிக சந்தோஷமாக இருந்தது. அவன் யோசனையுடன் அமர்ந்திருந்ததை பார்த்ததும் அவளும் அமைதியாக அவனைப் பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள். அவள் உணர்ந்த அந்த குளுமையும் அவன் நல்லவன் என்று சொல்லாமல் சொன்னது.
சிறிது நேரத்திற்கு பிறகு வழக்கம் போல அவள் காதிற்கு கீழ் கழுத்து வளைவில் இருந்த சிறிய தழும்பை பார்த்தான்.
குழலி... இந்த தழும்பு பற்றி ஏதாவது நினைவு வந்ததா என்று கேட்க அவளோ கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள். ஒவ்வொரு தடவையும் அந்த தழும்பு பற்றி விசாரிப்பதும் அவள் தெரியாது என்று மறுப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது தான்.
அவன் கண்களில் எப்போதும் படுவது அவளுடைய காதின் கீழ் கழுத்து வளைவில் இருக்கும் அந்த சிறிய தழும்பு தான். ஏனோ அந்த காயத்திற்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக இருப்பதாகவே ராகவ்விற்கு தோன்றும்.
குழலியின் மனதிலும் பல குழப்பங்கள் இருந்தாலும் அவளும் எதையும் காட்டிக்கொள்ளாமல் ராகவ்விடம் இயல்பாகவே பழகினாள்.
நான்கு வருடம் இந்தியாவிற்கு திரும்பி வர முடியாது. வெளிநாட்டில் தான் இருக்க போகிறேன் என்று ராகவ் சொல்லவும் குழலிக்குள் சற்று தடுமாற்றம் வந்தது.
இந்த பதினைந்து நாளும் அவனை எப்போது காண்போம் என்று அவள் மனம் துடித்தது அவளுக்கு தானே தெரியும். அதற்குரிய காரணம்தான் தெரியவில்லை. ஏனோ தெரியவில்லை..