“அதுதான் நான் அப்பவே சொன்னேனம்மா. உங்க பொண்ணை எப்படி கூட்டிட்டுப்போனேனோ அப்படியே தான் கூப்பிட்டு வந்தேன்னு. உங்க பேச்சை மீறி லட்சுமி அப்படி என்ன செய்திடும்னு நீங்க நினைச்சீங்க? லட்சுமி குடும்பத்து மேல் உயிரையே வச்சிருக்கிற பொண்ணு. உங்களை மீறும் எண்ணம் லட்சுமிக்கு என்னிக்குமே வந்ததில்லை.”
“போதும் போதும்.” என்று வளர்மதி சொன்னபிறகுதான் சுகன்யா தான் பேசுவதை விட்டாள்.
வளர்மதி மகிழ்ச்சியுடனே மகளுடன் பேசாமலே அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
“அம்மா போன் பண்ணாங்க. ஏன் எடுக்கலை?”
“எப்ப?” என்று கேட்ட தோழியை முறைத்தாள் சுகன்யா.
“ஒரு கழுதைக்கு வேணும்னாலும் கழுத்தை நீட்டறேன். இந்த மாப்பிள்ளை வேணாம்னு சொன்ன லட்சுமியா இது?”
“ஏய். உனக்கெப்படி தெரியும்?”
“தெரியும் தெரியும். நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.”
“சும்மா உளறிக்கிட்டிருக்காதே. உனக்கு எப்படி தெரியும்.”
“அது அம்மா சொன்னாங்க.”
“அவங்க எனக்குத் துணையா உன்னை சென்னைக்கு அனுப்பலை. தனக்காக உளவறியத்தான் உன்னை என் கூட அனுப்பினாங்க.”
“ஆமா பெரிசா என்ன உளவறிஞ்சுட்டேன்?”
சுகன்யா அவளிடம் மறுத்தாலும், வளர்மதி மகாலட்சுமி மாதவனை வேண்டாம் என்று மறுத்ததும் பயந்துபோய் அவளைத்தான் அழைத்தாள்.
“ஏய் என்ன நடந்தது சென்னையில்? நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டினவ இப்ப இந்த மாப்பிள்ளை வேண்டாம்கிறா?”
“அம்மா. உங்க பொண்ணை எப்படி அழைச்சுட்டுப்போனேனோ அதே மாதிரிதான் திரும்ப அழைச்சுட்டு வந்திருக்கேன். அங்கே லட்சுமி யார்கிட்டயும் வேற மாதிரி பழகலை.”
“அப்ப ஏன் அவ இந்த மாப்பிள்ளை வேண்டாங்கிறா?”
“அம்மா. அதுக்கு என்ன காரணம்னு தெரியலை. ஆனா லட்சுமிதான் நீங்க காட்டற வேற எந்த மாப்பிள்ளையானாலும் கட்டிக்கத் தயார்னு சொல்லிட்டாப்பல இல்ல.”
“ஆமா. ஆனா ஏன் மாதவன் தம்பியை வேண்டாங்கிறா?” என்று தனக்குள்ளேயே குழம்பினாள்.
திருமணம் முடிகிற வரைக்கும் அவள் மனம் பதைத்துக்கொண்டுதான் இருந்தது.
இப்போது சுகன்யா கூறியதைக் கேட்டதும்தான் அவள் மனதில் பால் வார்த்தது போலிருந்தது.
மகளுடன் பேசும் எண்ணத்தை விடுத்து அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.