தோட்டத்தில் அமர்ந்து இருந்த பிரதாபன் தான் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியில் வசதியாக சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.
மூடிய அவன் கண்களின் முன் ராகவின் முகம் வந்து சென்றது. இப்போது இவன் என்ன செய்து கொண்டிருப்பான் என்ற யோசனையுடன் கண்களை திறந்தவன் முன் மொட்டை மாடியில் நின்றுகொண்டு வானத்தை ரசித்து கொண்டிருந்த ராகவ் தெரிந்ததான்.
யோசனையுடன் ராகவையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் பிரதாபன்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த சத்யா அண்ணா... என்ன அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அது இருக்கட்டும்... முதலில் நீ சொல்லு மல்லி ஏன் அடிக்கடி உனக்கு போன் செய்து உன்னை நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள்.
அண்ணா வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் நான்தான் அவளுக்கு வாங்கி கொடுக்க வேண்டும். அவள் வீட்டைவிட்டு வெளியே செல்ல மாட்டாள். செல்ல மாட்டாள் என்று சொல்வதை விட எங்கும் தனியாக சென்று விட மாட்டாள் என்பது தான் உண்மை.
நான் தான் அவளை கிளினிக்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே அமர்ந்து விடுவாள்.
நான் பத்து நாள் வெளியே போகிறேன் என்று சொன்னதும் பத்து நாளுக்கு தேவையான அனைத்தையும் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு நச்சரிக்க தொடங்கி விட்டாள். அதோடு பத்து நாள் வெளியே செல்லப் போகிறீர்கள், ஒரு நாளாவது வீட்டிலேயே இருக்க மாட்டீர்களா என்று அடம் வேறு... குழந்தைகளை கூட சமாளித்துவிடலாம், இவளை சமாளிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. நமக்கெல்லாம் ஆயிரம் கவலைகள்.... இந்த உலகத்தில் கவலையே இல்லாமல் இருக்கும் ஒரே ஜீவன் அவள்தான்.
அவளும் தனியாக வாழ பழகிக் கொள்ளும் அளவிற்கு நீ அவளுக்கு தைரியத்தை ஊட்டி இருக்க வேண்டும் சத்யா... நீயாகவே அவளுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து கொடுக்க முடியுமா... உனக்கே பொறுப்புகள் ஆயிரம். இதில் இவளுக்கு வேறு எல்லாம் செய்ய வேண்டுமா... உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா....
அண்ணா நீங்கள் சொல்வது சரிதான்.... நாமெல்லாம் பிறக்கும்போதே நஞ்சுடன் பிறந்த பாம்பு குட்டிகள் போல... ஆனால் அவள் விதிவசத்தால் என் வலையில் சிக்கிக் கொண்ட தவளை. அவளை தனியே வெளியே அனுப்பிவிட்டால் உலகம் தெரிந்து தனியாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்து விட்டால் நமக்கு தான் சிக்கல்.