தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
“ஸ்டூடண்ட்ஸ்! சர்க்குலர்ல வந்த விஷயம் என்னன்னா!” சிஸ்டம் சாப்ட்வேர் மணி சார் எப்பவுமே பயன்படுத்தும் வார்த்தை, “விஷயம் என்னன்னா!”
அதை எத்தனை தடவை வகுப்பில் சொல்கிறார் என்று எண்ணி கணக்கிடும் மாணவர்களும் உண்டு.
“அண்ணா யுனிவர்சிட்டி விதிகள்படி , இன்ஜினியரிங் மாணவர்கள் தங்கள் துறை சம்பந்தமான ஒரு நிறுவனத்துக்கு இண்டஸ்ட்ரியல் விசிட் போகணும்.!” இப்போ பாடச்சுமை அதிகம் இல்லாத காரணத்தால் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வியாழன் வெள்ளியை உங்கள் பயணத்துக்கு உள்ள தேதியா முடிவெடுத்து இருக்காரு. இந்த இருபத்தி அஞ்சு நாளுக்குள் கம்பெனி, பஸ், ஹோட்டல் எல்லாத்தையும் நீங்களா அரேஞ்ச் பண்ணனும். மீத விவரங்கள் உங்க வகுப்பு ஆசிரியர்கிட்ட பேசிக்கோங்க! என்றார்
ஹே என்ற ஆனந்தக் கூச்சல் எழுந்தது.
இம்முறை அவர்களின் வகுப்பு ஆசிரியை லட்சுமி மேம், அவரின் அல்காரிதம் வகுப்பில் டூர் ப்ளான் பற்றிப் பேசத் துவங்கினார்கள். கோயம்புத்தூரில் ஒரு சின்ன கம்பெனி இருக்கிறது, அங்கே பேருக்கு சென்றுவிட்டு, ஊட்டியை மிச்ச மூன்று நாள் சுற்றலாம் என்று திட்டமிட்டனர். ஆசிரியை வியாழன், வெள்ளி, சனி போதும், ஞாயிறு ஊர் திரும்பி ஓய்வெடுக்கலாம் என்று சொல்ல, சரியென்று ஒப்புக்கொண்டனர். ஏற்பாடுகளை கவனிக்க ஐந்து பேர் கொண்ட மாணவர் குழு உருவானது, அதில் ரம்யாவை மாணவிகளின் கருத்துக்களைத் தெரிவிக்க ஒரு உறுப்பினராய் சேர்த்துக் கொண்டனர். ஏண்டி வாணி, இதுல கூட என்னை சேர்க்க மாட்டானுங்களா இவனுங்க! எல்லாம் அவ நல்லாப் படிக்கிறான்னு தானே, இந்த செமெஸ்டர் அவளைப் பின்னுக்குத் தள்ளுறேன் பாரு என்று நறநறத்தாள்.
டூர் செல்ல ஒருவருக்கு 1200 ரூபாய் கட்டணம் என செலவுகளைக் கணக்கிட்டு சொல்லவும், சில மாணவர்களுக்குத் தயக்கம். வீட்டில் உள்ள நிலைமை தெரிந்தே சிக்கனமாக இருக்கும் சிலருக்கு இது பெரிய தொகையாகத் தெரிந்தது. ரம்யாவும் இதே கருத்தை மாணவிகள் சார்பாக எதிரொலிக்க, பேருந்து ஒன்றை சலுகை விலையில் அமர்த்தித் தர முடியும் என்று சொன்னான் ஒரு மாணவன். எனவே, அவர்கள் 950 ரூபாய் என்று மறுகணக்கீடு செய்தனர். முதலில் வசூல் பண்ணிப்போம், டூர் முடிஞ்சதும் மிச்சம் இருந்தால் திருப்பிப் பங்கிட்டுக் கொடுப்போம் என்று முடிவு செய்தனர். எல்லாரும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று ஹெச்ஓடி சொன்னதாக லட்சுமி மேம் சொன்னார்கள். ஹாஸ்டலில் தங்கிய சில மாணவர்கள் தாங்கள் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை இப்போது உடனே செலுத்த முடியாதவர்களுக்குக் கொடுத்துதவ முன்வந்தனர். இந்த விஷயத்தில் வகுப்பு முழுவதும் ஒற்றுமையாகவே செயல்பட்டு வந்தது.