தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 04 - முகில் தினகரன்
ஏ.சி.தீனதயாளனிடம் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். “ஓ...காட்!...இது எப்படி சாத்தியம்?...நேத்திக்கு ராத்திரி ஒண்ணே முக்கால் மணி வரைக்கும் அவன் என் கூடத்தானே இருந்தான்?...அதுக்கப்புறம் என்ன நடந்தது?”
தகவல் தெரிவித்த கான்ஸ்டபிளிடம் “என்னய்யா..எப்படி ஆச்சாம்?” கேட்டார்.
“சார்...அங்க கூடியிருக்கற எல்லோருமே... “இது பேயோட வேலைதான்”னு ஒட்டு மொத்தக் குரல்ல அடிச்சுச் சொல்றாங்க சார்!”
“ஓ...அப்படியா?” என்றபடி தாடையைச் சொறிந்த ஏ.சி. “ஏம்ப்பா..நீ அதை நம்பறியா?”
“அது...வந்து...சார்” ஒரு போலீஸ்காரராய் இருந்து கொண்டு பேய்...பிசாசுக மீதெல்லாம் நம்பிக்கை இருக்குதுன்னு சொன்னா ஏ.சி.தன்னை கலாய்த்து விடுவார் என்றெண்ணிய அந்தக் கான்ஸ்டபிள் “சேச்சே!...இந்தக் காலத்திலே..பேயாவது?...பிசாசாவது?” என்றார்.
இட வலமாய்த் தலையை ஆட்டிய ஏ.சி. “நோ...இது பேய்களோட வேலதான்!” என்றார்.
“சா....ர்?...என்ன...சொல்றீங்க?...நீங்களுமா....?”
“யெஸ்!...நடந்ததை...நடக்கறதை...எல்லாத்தையும் பார்க்கும் போது...ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி...இதில் சம்மந்தப்பட்டிருக்கும் போலத்தான் தெரியுது!..பட்...ஷ்யூரா...சொல்ல முடியாது!...சொல்லவும் கூடாது!”
“கரெக்ட் சார்!...எனக்கும் அதேதான் சார்!...ஒரு போலீஸ்காரனா இருந்திட்டு அதையெல்லாம் நான் நம்பறேன்னு சொன்னா...எங்க நீங்க என்னைப் பார்த்துச் சிரிப்பீங்களோ?ன்னு பயந்துட்டுத்தான் நம்பாத மாதிரி பேசினேன்!” என்றார் அந்தக் கான்ஸ்டபிள்.
“அப்ப...நீ...நம்பறே?” தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்துக் கொண்டு ஏ.சி.தீனதயாள் கேட்க
“வந்து...நீங்க நம்பறீங்களே சார்!” என்றார் அவர் அவசரமாக
“யோவ்!...நான் எப்பய்யா பேயை நம்பறேன்னு சொன்னேன்?... “ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம்”ன்னுதானே சொன்னேன்?”
“ஆ...ஆமாம் சார்...ஆமாம் சார்!”
அந்தக் கான்ஸ்டபிள் திணறுவதைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட ஏ.சி. “சரி...அங்க போயிட்டு வந்தியே....அந்த பேய் இருக்கறாதாச் சொல்லப்படற காம்ப்ளக்ஸுக்குள்ளார போய்ப் பார்த்தியா?” கேட்டார்.