தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 06 - முகில் தினகரன்
வழக்கமாய் இரவு பனிரெண்டு மணி வரையில் கலகலப்பாகவும், மனித நடமாட்டத்துடனும் இருக்கும் “விஸ்வா டவர்ஸ்” ஏரியா இன்று மாலை ஏழு மணி வாக்கிலேயே மயான அமைதிக்கு மாறியிருந்தது.
சரியாக பத்தரை மணியான போது, சுற்றும்முற்றும் பார்த்தவாறே அங்கு வந்து நின்றான் திவாகர்.
“பாக்கியம் வருவாளா?...இல்லை...ஏமாத்திடுவாளா?” அவன் இனம் புரியாத ஒரு குறுகுறுப்பில் எதற்கோ காத்திருந்தான்.
தனியாக நிற்க போரடித்ததால், பாக்கெட்டினுள் கையை விட்டு, கோல்டு ஃபில்டர் பாக்கெட்டை எடுத்து அதிலிருந்து ஒன்றை உருவி வாயில் வைத்தான்.
இன்னொரு பாக்கெட்டில் இருந்த லைட்டரை எடுத்து சிகரெட்டின் முனையைச் சிவப்பாக்கி, புகையை இழுத்தான்...ரசித்தான்...சுவைத்தான்.
அப்போதுதான் அவன் பார்வையில் அது பட்டது. காம்ப்ளக்ஸின் பின்புறமிருந்த மரத்தினடியில்...இருட்டான இடத்தில் ரோஸ் நிறப் புடவையில் பாக்கியம் நின்று கொண்டிருந்தாள்.
சட்டென்று கையிலிருந்த சிகரெட்டைக் கீழே போட்டுக் காலால் மிதித்து அணைத்து விட்டு, வேக வேகமாக அவளிடம் சென்றான். இவனுக்கு முதுகைக் காட்டியபடி நின்று கொண்டிருந்தவளிடம், “என்ன பாக்கியம் நீ எப்ப வந்தே?..ஏன் இங்க வந்து நின்னுட்டிருக்கே?...நான் உன்னைய டூ வீலர் ஸ்டாண்ட்லதானே நிக்கச் சொன்னேன்?” கேட்டான்.
அவளிடமிருந்து பதிலே இல்லை.
“என்ன பாக்கியம்?...ஏன் அந்தப் பக்கம் திரும்பி நிக்கறே?...கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பி என் முகத்தை பாரேன்!” என்றான்.
அப்போதும் அவள் கழுத்தைத் திருப்பாமல், வாய் திறந்து பதிலேதும் சொல்லாமல், வலது கையை மட்டும் நீட்டி, சற்றுத் தள்ளியிருந்த காம்ப்ளக்ஸின் பவர்ஹவுஸ் ரூமைக் காட்டினாள்.
“ஓ...அங்க போயிடலாம்!”ங்கறியா?” என்று கேட்டுச் சிரித்தவன், “என்னோட ஃபேன்ஸி ஸ்டோர்ல இதை விட நல்ல வசதியிருக்கும் போது...இந்த இடம் எதுக்கு பாக்கியம்?” என்றான்.
அவள் எதுவும் பேசாமல் பவர்ஹவுஸை நோக்கி நடக்க,